நரேந்திர மோடி ஒரு ஹிட்லர்: வைகோவின் அடுத்த அதிரடி

 

நரேந்திர மோடி ஒரு ஹிட்லர்: வைகோவின் அடுத்த அதிரடி

பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஹிட்லர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதுரை: பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஹிட்லர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திர மோடி, நாடு நாடாக சுற்றுவது, வித விதமான உடைகள் அணிவது என்ற இரண்டு போதை இருக்கின்றன என சமீபத்தில் விமர்சித்திருந்தார். அதனையடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரதமரை வைகோ இவ்வாறு விமர்சித்தால் சரியாக இருக்காது என எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி ஹிட்லரை போல ஒரு பாசிசவாதி. ஆட்சி அதிகாரத்தை இழக்க ஒருபோதும் விரும்பமாட்டார். பாராளுமன்றத்துக்கு தீ வைத்துவிட்டு ஹிட்லர், கம்யூனிஸ்ட்கள் மீது பழிபோட்டார். அது போல பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தை தக்க வைப்பதற்காக எந்த அளவுக்கும் செல்வார். 

மத்திய பிரதேச மாநில தேர்தலில் பாஜக-வினர் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. வடமாநிலங்களில் ஓட்டு போட பணம் கொடுக்கும் வழக்கம் இல்லை. இதனை பாஜக-வினர் ராஜஸ்தான், திரிபுரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். மோடி மீண்டும் பிரதமராக வந்தால் அரசமைப்பு சட்டம் நாசமாக்கப்படும். கூட்டாட்சி தத்துவம், மதசார்பின்மை தகர்க்கப்படும் என்றார்.