நம் நாட்டில் கொரோனா வைரஸ் இறப்பு விகிதம் தென்கொரியாவை காட்டிலும் குறைவு…
நம் நாட்டில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட உயிர் இழப்பு ஒரு லட்சம் பேருக்கு 0.09 மக்கள் என்ற அளவில் உள்ளது. இது சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பரவுவதை சிறப்பாக கட்டுப்படுத்திய தென்கொரியாவை காட்டிலும் மிகவும் குறைவாகும் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தொற்று நோயான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கி விட்டது. இந்த தொற்று நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,200ஐ தாண்டி விட்டது. கொரோனா வைரஸ் பலி அதிகரித்துள்ள போதிலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் ரிசோர்ஸ் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் பரவலால் முதலில் பாதிக்கப்பட்ட நாடுகளில் தென்கொரியா தனது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,780 மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 250 என்ற அளவோடு சிறப்பாக கட்டுப்படுத்தியது. அதன் இறப்பு விகிதம் 2.3 சதவீதமாக மிகவும் குறைவாக உள்ளது. அதேசமயம் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் ஒரு லட்சம் பேருக்கு 0.48 மக்கள் இறந்துள்ளனர். இது சீனா (0.33) மற்றும் இந்தியாவை காட்டிலும் (0.09) அதிகமாகும்.
சர்வதேச நாடுகளின் கோவிட்-19 இறப்பு விகிதம்
நாடுகள் இறப்பு எண்ணிக்கை (லட்சம் பேருக்கு)
பெல்ஜியம் 67.44
ஸ்பெயின் 52.53
இத்தாலி 46.72
இங்கிலாந்து 41.49
பிரான்ஸ் 36.77
அமெரிக்கா 19.85
ரஷ்யா 00.81
தென்கொரியா 00.48
சீனா 00.33
இந்தியா 00.09