நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார் ராஜபக்சே

 

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார் ராஜபக்சே

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார்ர். ஆனால், ராஜபக்சே பிரதமராக பதவியேற்றது இலங்கை அரசியல் சாசனப்படி செல்லாது. நாடாளுமன்றத்தில் எனக்குத்தான் பெரும்பான்மை உள்ளது. நானே  பிரதமராக தொடர்கிறேன் என ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருந்தார். இதனால், அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

இதனிடையே, இலங்கை நாடாளுமன்றம் 14-ம் தேதி (இன்று) கூடும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்றம் கூடும்போது ராஜபக்சே தலைமையிலான புதிய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபக்சே தோல்வியடைவார் என கருதியதால் நாடாளுமன்றத்தை கலைத்து சிறிசேனா உத்தரவிட்டார். மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பாக அரசு பிறப்பித்த அறிவிக்கையை ரத்து செய்தும், ஜனவரி 5-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கும் இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது, நாடாளுமன்றம் கூடியதும் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தரப்பினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர், அதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தார். எனவே, ரணில் விக்ரமசிங்கே தரப்பு கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்தார். இதனால் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை இழந்தார்.