நடிகை ரோஜாவை தாக்க முயன்ற சொந்த கட்சியினர்…வைரல் வீடியோ!
ரோஜாவுக்கு ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ள ரோஜா சினிமா மட்டுமல்லாது அரசியலில் சாதித்துள்ளவர். ஆந்திர அரசியல் களத்தில் குதித்த அவர், முதலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பிறகு நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார். மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்ற ரோஜா சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது ரோஜாவுக்கு ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சித்தூர் மாவட்டம் கே.வி.புரத்தில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் கிராம தலைமை செயலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ரோஜா அங்கு சென்றார். அப்போது அந்த ஊரை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரான மண்டல ஒன்றியக் குழு உறுப்பினர் அம்முலுவின் ஆதரவாளர்களான 200 பேர் ரோஜாவை தாக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கிருந்த போலீசார் ரோஜாவை மீது பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
ரோஜாவுக்கும் அம்முலுவுக்கும் இடையே பிரச்னை நடந்து வருவதாகவும் அதன் எதிரொலியாகவே அவர் ரோஜாவை தாக்கவந்தார் என்றும் கூறப்படுகிறது.
நகரி தொகுதி எம்.எல்.ஏவான ரோஜாவின் காரை முற்றுகையிட்டு அவரது கட்சியினரே தாக்க முயற்சி. தொகுதிப் பக்கம் ரோஜா தலைகாட்டவில்லை எனக்குற்றச்சாட்டு. சினிமா டூ அரசியல்.. கொஞ்சம் கஷ்டம்தான் போலையே.. #Roja #Attack #Nagari pic.twitter.com/RxnVwLau4w
— Mahalingam Ponnusamy (@mahajournalist) January 6, 2020
ஆனால் இதை ஏற்கமறுக்கும் ரோஜா, என்னை என் கட்சிக்காரர்கள் தாக்கவரவில்லை, எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்க முயன்றனர் என்றும் எங்களுக்குள் பிரச்னை இருப்பது போல் சித்தரிக்கப்படுகிறது என்றும் விளக்கமளித்துள்ளார்.