நடிகர் ரஜினியை கத்தியால் குத்த வந்தனர்: திடுக் தகவல்

 

நடிகர் ரஜினியை கத்தியால் குத்த வந்தனர்: திடுக் தகவல்

நடிகர் ரஜினியை கத்தியால் சிலர் குத்த வந்தனர் என பாடல்கள் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ராதாரவி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்

சென்னை: நடிகர் ரஜினியை கத்தியால் சிலர் குத்த வந்தனர் என பாடல்கள் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ராதாரவி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

“அம்மை அப்பன் புரடக்ஷன்ஸ்” வழங்க, ஆக்ஷன் ஸ்டார் அதிரடி அரசு கதை , திரைக்கதை, வசனம் , பாடல்கள் எழுதி ஒளிப்பதிவு செய்து, இசையமைத்து இயக்கித் தயாரித்தும் இருக்கும் படம் “கபடி வீரன்”.

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அறிமுக நாயகி காயத்ரி உள்ளிட்ட இப்படக் குழுவினருடன் இயக்குநர் கே.பாக்யராஜ், ராதாரவி, ஜாகுவார் தங்கம், நமீதா, ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ராதாரவி, இந்தப் படத்தின் ஹீரோ ஒரு ஸ்டண்ட் கலைஞர். எல்லோரும் டூப் போட்டுதான் சண்டை செய்வார்கள் ஆனால் ஒரிஜினலாக சண்டை போடுபவர் அரசு. நான் பிரசாரத்திற்காக ஏர்வாடி பக்கத்தில் காரில் போயிருந்த போது என் கார் மணலில் பதிந்து நகரமுடியாமல் நின்றுவிட்டது. அப்போது உடனடியாக காரை கையாலேயே தூக்கி உதவியது அரசுதான். சினிமாவில் தான் இப்படிப் பார்த்திருப்பீர்கள். ஆனால் நிஜத்தில் செய்வார் அரசு என புகழாரம் சூடினார்.

மேலு ம் பேசிய ராதாரவி ஒரு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அவர் கூறுகையில், கர்நாடகாவில் ஒரு ஹீரோவின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த சிலர் வந்தனர். அவர்கள் அந்த ஹீரோவை நோக்கி பெரிய கத்தியை எடுத்து அவர் கழுத்து மீது அடிக்க வந்தார்கள். அப்போது அரசு குறுக்கே பாய்ந்து அந்த கத்தி வெட்டை தான் வாங்கிக்கொண்டார். இன்னும் அவருக்கு அந்த காயம் உள்ளது என்றார்.

அடுத்து பேச வந்த ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம், ராதாரவி சொன்ன அந்த ஹீரோ வேறு யாருமல்ல ரஜினி தான் என சஸ்பென்ஸை போட்டு உடைத்தார்