நடனம் ஆடி, கட்டிப்பிடித்து மாணவர்களை பள்ளிக்கு வரவேற்கும் ஆசிரியை: வைரல் வீடியோ!
பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான முறையில் வரவேற்கும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி: பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான முறையில் வரவேற்கும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல்நாள் பள்ளிக்கு செல்ல பிள்ளைகள் எப்போதுமே ஒரு தயக்கம் காட்டுவார்கள். அதுவும் தங்களுக்கு வர போகும் ஆசிரியர் கண்டிப்பானவரா? அல்லது நல்லமுறையில் பழகுவாரா? என்று பலவித யோசனைகள் அவர்களின் மண்டைக்குள் வட்டம் அடிக்கும். ஏனென்றால் ஆசிரியர் என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம்தான். ஆனால் புதுச்சேரியிலுள்ள ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது செயலால் குழந்தைகளின் பயத்தை ஒரு நொடியில் விரட்டியுள்ளார்.
புதுச்சேரி நோனாங்குப்பத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் சுபாஷினி. இவர் காலையில் வகுப்புகளுக்கு வரும் பிள்ளைகளை வரவேற்க ஒரு வித்தியாசமான நடைமுறையைக் கையாண்டுள்ளார். இவர் வகுப்பின் ஒரு நோட்டீஸ் போர்ட்டில் கட்டிப்பிடித்தல், நடனம் ஆடுதல் போன்ற சில படங்களை ஒட்டி வைத்து அதில் ஏதேனும் ஒன்றை மாணவர்களைத் தேர்வு செய்யச் சொல்கிறார். மாணவர்கள் தங்கள் சாய்ஸ் எது என்று அந்த போர்டில் கை வைத்தால் அதில் உள்ளதை அவர்களுடன் சேர்ந்து செய்து அசத்துகிறார் இந்த ஆசிரியை. உதாரணமாக நடனம் என்பதைத் தொட்டவுடன், அந்த குழந்தையுடன் சேர்ந்து சுபாஷினியும் நடனம் ஆடி பிள்ளைகளை வரவேற்கிறார். கட்டிப்பிடித்தல் படத்தை தேர்வு செய்தால், பிள்ளைகளை அன்பாக கட்டிப்பிடித்து வரவேற்கிறார். இப்படி வகுப்பிற்கு வரும் அத்தனை மாணவர்களையும் ஆசிரியை சுபாஷினி அன்போடு வரவேற்கிறார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிரியர் என்றாலே பயந்து நடுங்கும் மாணவர்களை இப்படி அன்போடு வரவேற்கும் ஆசிரியை சுபாஷினியின் இந்த செயல் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டு வருகிறது.