நக்கீரன் கோபால் கைதுக்கு டிடிவி ஆதரவு….பழைய மோதலா? பாஜகவுடனான புதிய காதலா?

 

நக்கீரன் கோபால் கைதுக்கு டிடிவி ஆதரவு….பழைய மோதலா? பாஜகவுடனான புதிய காதலா?

பாஜகவுக்கு ஆதரவு என எடுத்து கொண்டிருக்கும் புதிய கதைதான் காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஆனால் இந்த புதிய கதை தினகரனின் அரசியல் கதையை முடிவுக்கு கொண்டுவராமல் இருக்க வேண்டுமே

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக நக்கீரன் இதழில் வெளியான கட்டுரைக்காக அந்த இதழின் ஆசிரியர் கோபால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் துணையோடு விடுதலை ஆகி இருக்கிறார். அவரது கைது பல்வேறு விவாதங்களை எழுப்பிய சூழலில் அதற்கு ஈடாக மற்றொரு விவகாரம் விவாதமானது. கோபால் கைதுக்கு எதிராக பாஜக தலைவர்களை தவிர ஒட்டுமொத்த தமிழக அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள்  என பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்தனர். ஆனால் தமிழக அரசியலில் வளர்ந்து வரும் தினகரன் மட்டும் கோபால் கைதுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அவரது இந்த ஸ்டாண்ட் தற்போது விவாதமாகி இருக்கிறது.

dhinakaran

பொதுவாக நக்கீரன் பத்திரிகைக்கும் அதிமுகவுக்கும் ஏழாம் பொருத்தம் என்றே கூற வேண்டும். குறிப்பாக ஜெயலலிதா இருந்தபோது நக்கீரன் கோபால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தார். அதற்கு காரணம் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட், ”மாட்டுக்கறி திங்கும் மாமி நான்” கட்டுரை, அவரது சொத்துக்குவிப்பு வழக்கு என பல்வேறு விவகாரங்களில் ஜெயாவை சீண்டினார் கோபால். 

ஜெயாவோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் அவரது நெருங்கிய தோழியான சசிகலாவையும் சொத்துக்குவிப்பு வழக்கில் கோபால் சீண்டி பல கட்டுரைகளை வெளியிட்டார். மேலும் சாதாரண கேசட் கடை வைத்திருந்த சசியின் குடும்பத்திற்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தது எனவும் கேட்டு செய்திகளை வெளியிட்டார். கோபால் உண்மையை வெளிக்கொண்டு வர இவ்வாறு செய்திகள் வெளியிடுகிறார் என ஒருதரப்பினர் கூறினாலும், வேண்டுமென்றே திமுகவுடன் சேர்ந்து கொண்டு ஜெயா, சசி ஆகியோர் மீது அவதூறு பரப்புகிறார் எனவும் மற்றொரு தரப்பினர் கூறினர்.

sasikala

இந்த நிலையில்தான் ஜெயலலிதா உயிரிழந்தார். அவரது உயிரிழப்பில் மர்மம் இருக்கிறது அவரது மரணத்திற்கு சசி குடும்பத்தினர்தான் என சிலர் கூறி வந்த சூழலில் சசிகலா குடும்பம் குறித்தும், ஜெயா மரணம் குறித்தும் பல்வேறு கவர் ஸ்டோரிகளை நக்கீரன் வெளியிட்டது. இதனால் ஆரம்பத்தில் இருந்தே  அதாவது ஜெயா, சசி நட்பு நெருக்கமாகி கொடநாடு வரை சென்றபோது ஆரம்பித்த, நக்கீரன் Vs ஜெயா-சசி மோதல், ஜெயலலிதா மரணத்தில் உச்சம் பெற்றது.

jayasasi

இதனால் கோபால் மீது மன்னார்குடி பெரும் கோபத்தில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த சூழலில் அவர் கைது செய்யப்பட்டதும் அதற்கு ஆதரவாக பழைய கதைகளை மனதில் வைத்துதான் தினகரன் குரல் கொடுத்தார். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என கூறப்படுகிறது.

ஆனால் கோபால் கைதானதில் தினகரன் ஆதரவுக்கு புதிய கதை ஒன்று இருக்கிரது என்கின்றனர் விவரமறிந்தவர்கள். சமீபமாக டிடிவி- ஓபிஎஸ் சந்திப்பு, ஈபிஎஸ் – ஆளுநர், ஈபிஎஸ் – பிரதமர் சந்திப்பு, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு என தமிழக அரசியல் வேறு விதமான சூழலில் இருந்து வருகிறது. இதனால் எதிர் வரும் நாட்களில் காட்சிகள் மாறலாம் எனவும் கூறப்படுகிறது. முக்கியமாக தினகரனை தனது கைகளுக்கு கொண்டு வரவேண்டும் இல்லையெனில் தினகரன் – அதிமுகவை இணைக்க வேண்டும் என நினைக்கும் பாஜக அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி இருப்பதாக தெரிகிறது.

gopal

மேலும், 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு தனக்கு பாதகமாக வந்தாலும், சாதகமாக வந்தாலும் பாஜகவின் துணையும், ஆளுநரின் துணையும் நிச்சயம் தேவைப்படும் எனவே இந்த நேரத்தில் ஆளுநரை பகைத்துக்கொள்ள வேண்டாம் என நினைத்த தினகரன் ஆளுநருக்கு சப்போர்ட் செய்யும் ஸ்டாண்டை எடுத்து கோபால் கைதுக்கு ஆதரவாக பேசினாராம்.

இருப்பினும் டிடிவி தினகரன் பொதுவாக பத்திரிகையாளர்களை அணுகும் விதம் மிகவும் இயல்பாக இருக்கிறது என்ற பிம்பம் தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்கு இருந்து வருகிறது. ஆனால் ஒரு பத்திரிகையாளர், தேவையில்லாமல் கைது செய்யப்பட்டதற்கு ஆதரவாக தனது அரசியல் லாபத்திற்கு தினகரன் பேசியது பலரை முகம் சுழிக்க வைத்திருக்கிறது என்கின்றனர்.

ttvdinakaran

அதுமட்டுமின்றி பாஜக எதிர்ப்பரசியல் செய்தால் மட்டும்தான் தமிழகத்தில் நிலைக்க முடியும் என்ற ஒரு சூழல் நிலவி வரும் வேளையில் அதனை முழுமையாக செய்து கொண்டிருந்த தினகரன் இப்போது ஆளுநருக்கும், பாஜகவுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அவருக்கு சறுக்கலைத்தான் ஏற்படுத்தும் என்கின்றனர் அவர்கள். 

sasi

நக்கீரன் கோபால் கைதுக்கு ஆதரவாக தினகரன் பேசியதற்கு காரணம் பழைய கதையா? புதிய கதையா? என பார்க்கும்போது, அவர் பாஜகவுக்கு ஆதரவு என எடுத்து கொண்டிருக்கும் புதிய கதைதான் காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஆனால் இந்த புதிய கதை தினகரனின் அரசியல் கதையை முடிவுக்கு கொண்டுவராமல் இருக்க வேண்டுமே என நடுக்கத்தில் இருக்கின்றனர் அமமுகவினர். இருப்பினும் தினகரனின் இந்த நிலைப்பாட்டிற்கு சசிகலா ஆதரவு தெரிவிப்பாரா? என்பதுதான் அக்கட்சியினரிடையே பெரிய கேள்வியாக இருக்கிறது.