நகரத்தார்களின் வாழ்வை வளமாக்கிய பிள்ளையார் நோன்பு டிசம்பர் 13ல் கொண்டாட்டம்

 

நகரத்தார்களின் வாழ்வை வளமாக்கிய பிள்ளையார் நோன்பு டிசம்பர் 13ல் கொண்டாட்டம்

நகரத்தார்களுக்கு மட்டுமே உரித்தான தனித்தன்மை வாய்ந்த பிள்ளையார் நோன்பினை பற்றியும் அந்த நோன்பினை கடை பிடிக்கும் முறைகளை பற்றியும் விரிவாக பார்போம்.

நகரத்தார்களுக்கே உரிய முக்கிய விழாக்களில் மிகுந்த தொன்மையும்,பெருமையும் உடைய விழாவாக கடைபிடிக்கப்படுவது பிள்ளையார் நோன்பு ஆகும்.

nagarathar

இந்த நோன்பு முன்னொரு காலத்தில் செட்டிநாட்டை சுற்றியுள்ள நகரத்தார்களால் கடைபிடிக்கப்பட்டு பின்னாளில் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்ற மேன்மைகள் மிகுந்த நோன்பாக இந்த பிள்ளையார் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது.

பல்வேறு ஆண்டுகளாக நகரத்தார்களின் மிகுந்த நம்பிக்கைக்குரிய நோன்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் பிள்ளையார் நோன்பு ஆண்டுதோறும் காத்திகை மாத சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் சேர்ந்த நன்னாளில் கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டிற்கான பிள்ளையார் நோன்பு வருகின்ற கார்த்திகை மாதம் 27( டிசம்பர் 13) ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

nagarathar

பிள்ளையார் நோன்பினை பற்றிய வாய்மொழி வரலாற்று கதையினை பற்றிவிரிவாக பார்போம்:

முன்னொரு காலத்தில் நகரத்தார்கள் வாணிபத்தின் பொருட்டு அடிக்கடி கடற்பயணம் மேற்கொள்வதை அன்றாட வாடிக்கையாக கொண்டு இருந்தனர்.

ஒருமுறை சில நகரத்தார்கள் ஒன்று கூடி காவிரிபூம்பட்டினத்தில் இருந்து தங்களது பயணத்தை தொடங்கினர் .

 அவர்களின் பயணத்தின் பொழுது கடலில் கடுமையான சூறாவளி காற்று ஏற்பட்டு கப்பலின் திசை மாறி நிலப்பரப்பை அடைய முடியாமல் சிக்கித் தவித்தனர் அன்றைய தினம் கார்த்திகை தீபத் திருநாளாகும். 

அவர்கள் அன்றாடம் வணங்கும் மரகத பிள்ளையாரை நினைத்து தங்களைக் காக்கும்படி அனைவரும் ஒன்று கூடி மனதார வேண்டி கொண்டனர் .

nagarathar

மேலும் அந்த கடற் பயணத்தில் ஈடுபட்டு இருந்த அனைவரும் எப்படியாவது நாம் கரையை அடைந்து நமது குடும்ப உறுப்பினர்களை பார்க்கவேண்டும் என்ற ஆவலும் அனைவரது உளத்திலும் ஏற்பட்டது. 

அன்று தொடங்கி ஒவ்வொரு நாளும் அவர்கள் கடுமையான பல்வேறு இன்னல்களுக்கு ஆழாகி கொண்டு இருந்தனர்.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் நாட்களை கணக்கிடுவதற்காக தங்கள் வேஷ்டிகளில் இருந்து ஒரு நூலை எடுத்து பத்திரப்படுத்தினர். 21 நாட்கள் கழிந்ததும் அவர்கள் ஒரு தீவின் கரையை அடைந்தனர். 

நகரத்தார் அனைவரும் கரையை அடைந்த தினம் சஷ்டி திதியும் சதய நட்சத்திரம் கூடிய சுப தினம் ஆகும்.

nagarathar7

அன்று அவர்கள் உணவிற்காக பயணத்தில் கொண்டு வந்த அரிசி மாவு, நெய், வெல்லம், முதலியவற்றை கலந்து பிள்ளையார் போல் பிடித்து வைத்து 21 வேஷ்டி நூல்களையும் சேர்த்து திரி போல் செய்து அந்த மாவு பிள்ளையரில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். 

அத்தீவில் கிடைத்த ஆவாரம் பூவைக் கொண்டு பிள்ளையாருக்கு அர்ச்சனையும் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் மீண்டு வந்து காவிரி பூம்பட்டினத்தை அடைந்து தங்கள் குடும்பத்தினர் இடையே நடந்தவற்றை எல்லாம் விவரித்தனர். 

தங்கள் மக்களில் பெரும்பாலோரைக் காப்பாற்றிய மரகத பிள்ளையாரை ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபத் திருநாளில் இருந்து 21 ஆம் நாள், சஷ்டியும் சதயமும் கூடும் நாளில் ஆவாரம் பூவும், அரிசி மாவு பிள்ளையாரும் புத்தம் புது வேஷ்டியின் நூலில் செய்யப்பட்ட திரியைக் கொண்டு விளக்காக ஏற்றி தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் காக்குமாறு பிள்ளையாரை வேண்டுகின்றனர்.

nagarathar4

பின்னர் அந்த மாவு பிள்ளையாரை குடும்பத்துடன் உண்டு மகிழ்கின்றனர். ஆடவர்களால் முதன்முதலில் துவக்கப்பட்ட இந்த நோன்பு இன்றளவும் வீட்டின் தலைமகன் எடுத்துக் கொடுக்க மற்றவர்கள் இறைவனை வேண்டி அவ்விளக்கினை பெற்று உண்டு வருகின்றனர். 

வேலை நிமித்தமாகவோ வேறு காரணத்தாலோ ஆண்கள் வீட்டில் இல்லை என்றாலும் ஒரு வயது ஆண் குழந்தையாக இருந்தாலும் அந்தக் குழந்தையின் கைகளில் இருந்து பெண்கள் விளக்கினை பெற்று கொள்வர்.

இத்தகைய பெருமைகள் மிகுந்த பிள்ளையார் நோன்பினை எப்படி கடைபிடிப்பது?

திருக்கார்த்திகையில் இருந்து 21ஆம் நாள் கொண்டாடப் படும் நோன்பு பிள்ளையார் நோன்பு ஆகும். சஷ்டித்திதியும் சதயநட்சத்திரமும் கூடிவரும் நாளில் இந்த நோன்பு  கொண்டாப்படுகிறது. இந்த நோன்பானது மாலையில் அனுஷ்டிக்கப்படும் நோன்பு ஆகும் .

nagarathar6

முதல் நாள் வீடுகளை சுத்தமாக கூட்டி மொழுகி மாவிலைத் தோரணம் கட்டுவார்கள் . அதனையடுத்து நோன்பு அன்று நடு வீட்டில் கோலம் இட்டு அப்பம் ,கருப்பட்டிப் பணியாரம் , வெள்ளப்பணியாரம் , கந்தரப்பம் ,உளுந்துவடை , மோதகம் , உப்புகொழுக்கட்டை ,சீடை ,அதிரசம் என பல்வேறு வகையான பலகாரங்கள் செய்து வைத்து ஐந்து வகையான பொரிகளை வீட்டிலே வறுத்து பிள்ளையாருக்கு படைத்தது மகிழ்வர். 

nagarathaar5

நகரத்தார்கள் இடையே பிள்ளையார் நோன்புக்கு என்று பிறந்த வீட்டில் இருந்து சீராக அரிசியும் வெல்லமும் கொடுத்தனுப்பும் பழக்கம் அன்றில் இருந்து இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது .

அதுபோலவே நகரத்தார்களின் திருமணத்தில் வெள்ளிச்சாமான்களுடன் வெள்ளிப் பிள்ளையாரும் உடன் வைப்பர் இது இப்போதும் நடைமுறையில் உள்ளது.
 
வீட்டில் உள்ள மனைப்பலகையில் மாக்கோலம் இட்டு பிள்ளையார் படத்தை வைத்து பூச்சூட்டி உடன் வெள்ளிப்பிள்ளையாருக்கும் பூச்சூட்டி 
இருபுறமும் ஒரு குச்சியில் கண்ணுப்பிள்ளைப்பூ, ஆவாரம்பூவும், மாவிலையும் வைத்து கட்டி இதை விநாயகரின் இருபுறத்திலும் வைத்து விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். 

nagarthar7

வீட்டில் உள்ளோரின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி கருப்பட்டிப் பாகையும் அரிசிமாவையும் பிசைந்து செய்த மாவினால் கூம்பு வடிவில் பிள்ளையார் பிடித்து வைத்து அந்த பிள்ளையார் பூஜையை செய்யும் தலைவன் (பெண்கள் இதைச் செய்யக்கூடாது) .

இந்தக் கருப்பட்டிப் பிள்ளையாரின் மீது 21 நூல்இழைகள் கொண்ட திரியைப் போட்டு நெய் ஊற்றி நுனி வாழையிலையை விரித்து வைத்து அதன் நுனியில் வெள்ளி அகல் விளக்கு வைத்து மலர்ச்செண்டு சாற்றி, தீபம் ஏற்றி வைக்கின்றனர். 

அதன் பின்னர் பிள்ளையாருக்குப் பொரியினால் அபிஷேகம் செய்கின்றர்,அபிஷேகம் செய்யும் போது சங்கு ஊதுகின்றனர் அதன் பின்னர் கருப்பட்டி அப்பம், பொரி, முதலான 21வகைப் பலகாரங்களை நிவேதனம் செய்து, தேங்காய் உடைத்துப் பழம் வெற்றிலை பாக்கு வைத்துப் படைத்துத் தீபம் காட்டி வழிபடுகின்றனர்.

ஒரு தடுக்கு போட்டு அதில் வீட்டுக்கு பெரிய ஆண் மகன் அமர்ந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து விநாயகர் அகவல் படித்த பின் நிவேதனம் செய்து தீபம் பார்த்த பின் அனைவரும் இலை எடுத்துக் கொள்வார்கள். 

வீட்டில் யாரேனும் முழுகாமல் இருந்தால் வயிற்றில் உள்ள பிள்ளைக்கும் சேர்த்து இரண்டு இலை எடுத்துகொள்வார்கள் .

nagarathar5

வழிபாட்டின் நிறைவாக, இந்த வழிபாட்டினை முன்னின்று செய்யும் குடும்பத் தலைவன், கூம்பு வடிவான பிள்ளையாரின் உச்சியில் தீபம் எறிந்து கொண்டிருக்கும் போது ஜோதியுடன் சுடரோடு பிள்ளையாரை எடுத்து அப்படியே தனது வாயினுள் போட்டுக் கொள்கின்றனர்.

அதன் பின்னர் அவர் ஒவ்வொரு பிள்ளையாராக எடுத்துக் கொடுக்க, வீட்டில் உள்ளோர் அனைவரும் வரிசையாக வந்து பிள்ளையாரைப் பெற்றுக் கொண்டு தீபத்துடன் தங்களது வாயில் போட்டுக் கொள்கின்றனர். 

நிறைவாக, பிள்ளையாருக்கு என ஏற்றிவைக்கப்பட்ட பிள்ளையாரையும் குடும்பத் தலைவன் எடுத்து தனது வாயில் போட்டுக் கொள்கிறார்.

அதனை தொடந்து மறுநாள் மாலை விளக்கு வைத்தபின் விளக்கேற்றி சங்கு ஊதி பிள்ளையாரின் இருபுறமும் வைத்த ஆவாரம்பூ, கண்ணுப்பில்லை பூங்கொத்தை வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு

அருகிலுள்ள பிள்ளையார் கோயிலில் பிள்ளையாருக்கு முன் பூங்கொத்தை தட்டியபின் கோயிலின் ஒட்டுக் கூடத்தின் மீது வீசி விட்டு வீடு திரும்புகின்றனர் நகரத்தார்கள்.

இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க இந்த பிள்ளையார் நோன்பினை நீங்களும் கடைப்பிடித்து உங்களது வாழ்வில் சகல நன்மைகளையும் பெறலாம்.