தொழில்துறையில் தொடர்ந்து முன்னேறும் தமிழகம்: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்

 

தொழில்துறையில் தொடர்ந்து முன்னேறும் தமிழகம்: தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம்

தொழில்துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னேறி வருகின்றது என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம் தெரிவித்துள்ளார்

கடலூர்: தொழில்துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னேறி வருகின்றது என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு அந்நிய முதலீ டுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது, கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான முதலீடுகளுக்கு 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, அடுத்தாண்டு ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், கடலூரில் இன்று செய்தியாலர்காளிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில்துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னேறி வருகிறது என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி அளவில் முதலீடு பெறப்பட்டது. கோடிக்‌கணக்கில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்க மூன்று முதல் 7 ஆண்டுகள் ஆகும். அந்த வகையில், ஐடிசி உள்ளிட்ட  68 தொழில் நிறுவனங்கள் ஏற்கெனவே பணிகளை தொடங்கியுள்ளன. இதன்மூலம் நேரடியாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 27 வேலை வாய்ப்பு மற்றும் பல லட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. 27 ஆயிரத்து 953 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அன்னிய முதலீடாகவும், குஜராத் மாநிலத்தில் இருந்து 20 ஆயிரம் கோடி ரூபாய் உள்நாட்டு முதலீடாவும் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகம் தொழில்துறையில் தொடர்ந்து முன்னேறவும், வளர்ச்சிப் பாதையில் புதிய இலக்குகளை அடையவும், வருகிற ஜனவரி மாதம் 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் வெற்றியடையும் எனவும் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கு செல்வதாக தெரிவித்த சம்பத், அதனை கொச்சைப்படுத்தும் விதமாக அமைச்சர்கள் சுற்றுலா செல்கிறார்கள் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூறிவருவதாகவும் குற்றம் சாட்டினார்.