தொழிலில் அமோக லாபம் வேண்டுமா? இந்த எளிய பரிகாரங்கள் செய்தால் போதும்!

 

தொழிலில் அமோக லாபம் வேண்டுமா? இந்த எளிய பரிகாரங்கள் செய்தால் போதும்!

அசுபர்களின் சேர்க்கை, பார்வை ஏற்பட்டிருந்தால் உத்தியோகம், தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படாது.

ஒருவரது வாழ்க்கை சகல செல்வங்களுடனும் மகிழ்ச்சியாக அமைய, அவரின் ஜாதகத்தில் ஜீவனஸ்தானம் எனப்படும் 10-ம் இடத்துக்கு உரிய கிரகமும் அந்த இடமும் நல்ல நிலையில் இருக்கவேண்டும். 10-ம் இடத்துக்கும் அந்த ஸ்தானத்துக்கு உரிய கிரகத்துக்கும் அசுபர்களின் சேர்க்கை, பார்வை ஏற்பட்டிருந்தால் உத்தியோகம், தொழில் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படாது. குறிப்பாக ஜீவன ஸ்தானத்துக்கு உரிய கிரகம், 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கக்கூடாது. இவ்வகைகளில் ஜீவனஸ்தானம் பலம் குன்றி திகழ்ந்தால், குறிப்பிட்ட பரிகாரத்தின் மூலம் நிவர்த்தி பெறலாம். அதன்படி, 12 ராசிகளுக்கும் உரிய எளிய பரிகாரங்களைத் தெரிந்துகொள்வோமா? 

மேஷம்:

ஜீவனஸ்தானம் நல்ல நிலையில் இல்லையெனில்,  இந்த ராசிக்காரர்கள் அமாவாசை, மூலம் நட்சத்திரம் வரும் நாள்களில் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி, வடைமாலை, வெற்றிலைமாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். இவ்விதம் தொடர்ந்து ஆறு மாதங்கள் செய்து வந்தால், உத்தியோகத்திலும் தொழிலிலும் மேன்மை காணலாம்.

ரிஷபம்:

சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, நீலமலர்களால் அர்ச்சனை செய்து, எள்ளன்னம் நைவேத்தியம் செய்து வழிபடவேண்டும். இவ்விதம் தொடர்ந்து 27 வாரங்கள் செய்து வந்தால், நல்ல திருப்பம் உண்டாகும்.

மிதுனம்:

தொடர்ந்து ஒன்பது பிரதோஷங்கள் சிவாலயங்களுக்குச் சென்று. நந்திதேவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, காப்பரிசி நைவேத்தியம் செய்வதுடன், சிவபெருமானுக்கு வில்வ தளங்களைச் சமர்ப்பிப்பது நல்லது.

கடகம்:

மாதம்தோறும் வரும் வளர்பிறை சஷ்டியன்று முருகப்பெருமானுக்கு ரோஜா அல்லது செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வதுடன், செவ்வாய்க் கிழமைகளில் அங்காரக பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். தொடர்ந்து ஆறு மாதங்கள் செய்வது விசேஷம்.

சிம்மம்:

27 வெள்ளிக்கிழமைகள் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபம் ஏற்றி, பால் பாயசம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரவேண்டும். சுக்கிரனுக்கு வெண்பட்டு வஸ்திரம் சாத்தி, நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

கன்னி:

புதன்கிழமைகளில் விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவதுடன், நவகிரகங்களில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் அணிவித்து, பச்சைப் பயறு பாயசம் அல்லது சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட மேன்மை உண்டாகும்.

துலாம்:

திங்கள்கிழமைகளில் அம்பிகைக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அத்துடன், நவகிரகங்களில் சந்திரனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். துலாம் ராசிக்காரர்கள், பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் திருப்பதிக்குச் சென்று வேங்கடவனை தரிசித்து வழிபட்டால், ஆறு மாதங்களில் நல்ல திருப்பம் ஏற்படும்.

விருச்சிகம்:

ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்குச் சிவப்பு வஸ்திரம் சாத்தி, செம்பருத்தி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவதுடன், சூரியனார்கோவில் அல்லது சூரியன் வழிபட்ட தலங்களுக்கு, ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் சென்று தரிசித்து வருவது நல்லது.

தனுசு:

சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி தளத்தால் அர்ச்சனை செய்வதுடன், புதன்கிழமைகளில் நவகிரகங்களில் புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்து, பச்சைப்பயறை பசுவுக்குத் தரவேண்டும்.

மகரம்:

வெள்ளிக் கிழமைகளில் லலிதா சஹஸ்ர நாமம் பாராயணம் செய்து, அம்பிகைக்குப் பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுவதுடன், பக்தர்களுக்கும் அதைப் பிரசாதமாகக் கொடுக்கலாம். மகாலட்சுமி தாயாருக்கு துளசியால் அர்ச்சனை செய்வதும் நன்மை தரும்.

கும்பம்:

செவ்வாய்க் கிழமைகளில் முருகக் கடவுளை வழிபடுவதுடன் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் பாராயணம் செய்யவேண்டும். இந்த வழிபாட்டை செவ்வாய்க் கிழமைகளில் மட்டுமின்றி, தினமும் செய்வது விரைவில் நன்மை ஏற்படச் செய்யும்.

மீனம்:

ஒன்பது வியாழக் கிழமைகள் ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்து, கறுப்புக் கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கவேண்டும். உத்தியோகம், தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம் காணலாம்.