தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 36 புள்ளிகள் உயர்ந்தது

 

தொடர் ஏற்றத்தில் பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 36 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 36 புள்ளிகள் உயர்ந்தது.

முக்கிய 8 துறைகளின் உற்பத்தி கடந்த செப்டம்பர் மாதத்தில் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவடைந்துள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்பட சில முன்னணி நிறுவனங்களின் நிதிநிலை முடிவுகள் சிறப்பாக இல்லை. மேலும் பஜாஜ் ஆட்டோ வாகன விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளது. இது போன்ற பாதகமான தகவல்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் பெரிய ஏற்றம் காணவில்லை.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீல், வேதாந்தா, டெக் மகிந்திரா, ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. யெஸ் பேங்க், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் எல் அண்டு டி உள்பட 14 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,429 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,166 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 172 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.09 லட்சம் கோடியாக குறைந்தது. நேற்று பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.154.12 லட்சம் கோடியாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீ்ட்டு எண் சென்செக்ஸ் 35.98 புள்ளிகள் உயர்ந்து 40,165.03 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 13.15 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,890.60 புள்ளிகளில் முடிவுற்றது.