தை மாத விசேஷ தினங்கள்!

 

தை மாத விசேஷ தினங்கள்!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌ சிறப்புகள் பற்றியும் அந்த மாதத்தில் நடைபெறும் விழாக்களை பற்றியும் விரிவாக பார்போம்.

நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து தொன்று தொட்டு வரும் பழக்கம் ஆகும்.

pongal

தமிழ் முறையில் கணிக்கப்பட்ட நாட்காட்டியின்படி ஆண்டின் பத்தாவது மாதம் தை ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது. 

ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் மக்கள் கொண்டாடுகின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.

தைப்பொங்கல் :

தை மாதப் பிறப்பு தமிழர்களால் தைப்பொங்கல் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

pongal

இது தமிழர்களுக்கே சிறப்பான பண்டிகையாதலால் தமிழர் திருநாள் என்றும் அறுவடையில் கிடைத்த புது நெல்லுக் கொண்டு சூரியனுக்குப் பொங்கலிட்டுப் படைக்கும் நாளாதலால் உழவர் திருநாள் என்றும் இந்தநாள் குறிப்பிடப்படுகின்றது .

pongal

மக்கள் நல்ல விளைச்சலுக்கு உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல் நாளை தைப்பொங்கலாகக் கொண்டாடுகின்றனர்.

மாட்டுப் பொங்கல் :

மாடுகள் நம் வயல்களை உழுகிறது, அறுவடைப்பணியில் உதவுகிறது,வண்டி இழுக்கிறது உழைப்பின் சின்னமாய் விளங்குகிறது அவற்றுக்கு நன்றி செலுத்தும் நாளே மாட்டுப்பொங்கல் ஆகும்.

mattu pongal

பொங்கல் கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளன்று நம் விவசாயத்துக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. 

இந்நாளன்று மாடுகள் குளிப்பாட்டப்பட்டு சந்தனம் குங்குமம் இட்டு மாலைகள் மற்றும் சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப்படுகின்றன.

mattu pongal

சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் செய்யப்பட்டு அவற்றுடன் செங்கரும்பு, பழவகைகள் ஆகியவை மாடுகளுக்கு படையலிடப்பட்டு வழிபாடு நடத்தி பின் வழிபாட்டுப் பொருட்கள் மாடுகளுக்கு உணவாக வழங்கப்படுகின்றன.

mattu pongal

தமிழகத்தில் அன்றைய தினத்தில் ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

காணும் பொங்கல் : 

 காணும் பொங்கல் அன்று செய்த சாதத்தை உடன் பிறந்தவர்களின் நன்மைகாக, காக்கா குருவிக்கு அன்னமிடவேண்டும் என்பதே  வரலாற்று கதை ஆகும்.

kaanum pongal

ஆற்றங்ரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ வாழை இலைகளை கிழக்கு முகமாய் பார்த்து 5 வகையான சாதங்களை வைக்கவேண்டும்.

முதல் நாள் பொங்கிய சாத்தில் மஞ்சள் பொடி, கொஞ்சம் குங்குமம் தூவி, பால் சேர்த்து , சக்கரைப் பொங்கல், தயிர் சேர்த்த சாதத்தை காகத்திற்கும் ,குருவிக்கும் படையல் வைக்க வேண்டும்.

kaanum pongal

காக்காப்பிடி வச்சேன் கணுப்பிடி வச்சேன்,காக்கைக்கு எல்லாம் கல்யாணம்,கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம், கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய் வாழணும் என்று சொல்லி படையல் வைக்க வேண்டும். 

kaanum pongal

ஆனால் இந்த நடை முறை மாறி தற்போது அனைவரும் குடும்பத்துடன் பல இடங்களை காணச்செல்கின்றனர். திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை போற்றும் விதமாகத் திருவள்ளுவர் தினம் காணும் பொங்கல் தினத்தன்று கொண்டாடப்படுவது மேலும் ஒரு சிறப்பாகும். 

தைப்பூசம் : 

சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள் தைப்பூசம் என்றும், உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாள் தைப்பூசம் என்றும் கருதப்பட்டு தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூச நட்சத்திரத்தில் தை பூசம் கொண்டாடப்படுகிறது.

thaipusam

இந்நாளில் சிவபெருமானையும் மற்றும் முருக்கடவுளையும் வழிபாடு செய்வது சகல நன்மைகளையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

thaipusam

மேலும் தை பூச தினத்தில் வடலூரில் உள்ள வள்ளலார் சத்தியஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.

தை அமாவாசை :

உத்திராண்ய காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சியாண காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையும் முன்னோர்களுக்கான வழிபாட்டிற்கு உகந்தவை எனக் கருதப்படுகின்றன.

thai amavasai

தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்வது நீண்ட நாட்களாக நம் முன்னோர்களால் கடைபிடிக்கபட்டு வருகின்ற வழிபாடு ஆகும் .

thai amavasai

இவ்வழிபாட்டின் மூலம் தாங்கள் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், குழந்தைப்பேறு, குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம், மகிழ்ச்சி ஆகியவை கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.

ரத சப்தமி : 

ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர் பிறையில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தான் சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார்.

ratha sapthamai

இந்நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி தீபம் ஏற்றி சூரிய வழிபாடு செய்ய வேண்டும். அன்றை தினத்தில் தங்களால் இயன்ற தானங்களைச் செய்யலாம்.

இது மட்டுமின்றி சபலா ஏகாதசி,புத்ரதா ஏகாதசி,புத்ரதா ஏகாதசி,சாவித்ரி கௌரி விரதம்,தை வெள்ளி வழிபாடு போன்ற முக்கிய விசேஷ தினங்களும் இந்த தை மாதத்தில் தான் கடைபிடிக்கப்படுகின்றது.