தேர்தலை கண்டு ஓடும் தலைவர்; இடைத்தேர்தலிலும் களமிறங்க நம்மவர் ரெடி!

 

தேர்தலை கண்டு ஓடும் தலைவர்; இடைத்தேர்தலிலும் களமிறங்க நம்மவர் ரெடி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலோடு நடைபெறவுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலோடு நடைபெறவுள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

இரண்டையும் எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்து தொகுதி பங்கீட்டையும் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக முடித்துள்ளது.

அந்த வகையில் கடந்த ஆண்டு கட்சி தொடங்கி தீவிரமாக களப்பணியாற்றி வரும் கமல்ஹாசன், வருகின்ற மக்களவை தேர்தலில் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என அறிவித்தார். இதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் கட்சிக்கான தேர்தல் சின்னமாக அக்கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட்டும் கிடைத்துள்ளது.

எனினும், இடைத்தேர்தல் குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் இருந்ததால் மக்கள் நீதி மய்யம் மக்களவை தேர்தலில் மட்டும் போட்டிஇடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என கமல் அறிவித்துள்ளார். மேலும், இதற்கான விருப்ப மனு அளிப்பவர்கள் ரூ.10,000 டிமாண்ட் டிராஃப்ட் செலுத்தி அதனை இன்று முதல் பெற்று கொள்ளலாம் என்றும், கட்சியின் இணையதளத்திலும் விருப்ப மனுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்பதை விரைவில் தெரிவிக்கிறேன் என கமல் கூறிய நிலையில், தற்போது அதிரடியாக இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என தெரிவித்துள்ளதால் அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.

போர் வரும்போது களமிறங்குவோம் என அறிவித்த ரஜினிகாந்த், இதுவரை கட்சியின் பெயரை கூட அறிவிக்காமல் தேர்தல்களை கண்டுக்காமல் தூரமாக ஓடி வரும் நிலையில், எதற்கும் அஞ்சாமல் மக்களை மட்டும் நம்பி துணிச்சலுடன் கமல் தேர்தலை எதிர்கொள்வது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.