துல்கர் சல்மானின் வீடியோவை பார்த்து கண்டித்த போலீஸ்: கிண்டல் செய்த நெட்டிசன்கள்!

 

துல்கர் சல்மானின் வீடியோவை பார்த்து கண்டித்த போலீஸ்: கிண்டல் செய்த நெட்டிசன்கள்!

மும்பை : நடிகர் துல்கர் சல்மானின் வீடியோ பார்த்துவிட்டு  மும்பை போலீசார் அவரை கண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி,  நடிகையர் திலகம் உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான். நடிகர் மம்மூட்டியின் மகனான இவர், த ஸோயா ஃபேக்டர் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக, சோனம் கபூர் நடிக்கிறார்.

இந்நிலையில்,  துல்கர் சல்மான் சொகுசு காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போனை பார்த்துக்கொண்டிருக்கிறார் அருகில் இருந்து, ஆபத்தானவர் என்று பெண்குரல் கேட்கிறது. இந்த வீடியோவை  சமூக வலைத்தள பக்கத்தில் சோனம் கபூர் பதிவிட்டிருந்தார்.

 

இதற்கு கண்டனம் தெரிவித்த மும்பை போலீசார்,  ‘இது நிஜமாகவே ஆபத்தானதுதான். கார் ஓட்டும்போது இது மாதிரி செய்வது உடன் செல்பவர்களின் உயிரையும் பணயம் வைப்பதற்கு சமம். இதை நாங்கள் சினிமாவில் கூட அனுமதிக்கமாட்டோம்’ எனப் பதிவிட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த சோனம் கபூர், ‘நாங்கள் காரை ஓட்டவில்லை. அந்த கார் ஒரு டிரெக்கால் இழுத்துச் செல்லப்படுகிறது. ஷூட்டிங்கிற்காக நடத்தப்பட்டக் காட்சி அது. எங்கள் மீது அக்கறை கொண்டதற்கு மகிழ்ச்சி. சாதாரண மக்களிடமும் இந்த அக்கறை இருக்கும் எனத் தெரியும், நன்றி!’ என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மும்பை போலீஸ், மும்பை மக்கள் அனைவரும் எங்களுக்கு ஸ்பெஷல்தான். நீங்கள் பாதுகாப்புடன் சென்றதை அறிந்ததில் மகிழ்ச்சி எனப் பதிவிட்டது.

இதன் பின்னர் முழு வீடியோவையும் பதிவிட்ட துல்கர் சல்மான், ‘நான் ஓட்டிய கார், ட்ரக்கில் கட்டப்பட்டுள்ளது. முன்னே கேமரா இருந்தது. நானே நினைத்தாலும் காரை திருப்பவோ, ஓட்டவோ முடியாது எனக் கூறியிருந்தார். துல்கருக்கு பதிலளித்த மும்பை போலீஸ், நீங்கள் விதிமீறலில் ஈடுபடாததற்காகப் பாராட்டுகிறோம்’ எனப் பதிவிட்டது.

ட்வீட் செய்வதற்கு முன் உண்மை என்னவென்பதை தெரிந்துகொண்டு செய்திருந்தால், பாராட்டியிருக்கலாம் என்று துல்கர் கூறியிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் சிலர் மும்பை போலீசை கிண்டல் செய்ய தொடங்கினர். ஆனால் சோனம் கபூர் குறுக்கிட்டு, போலீஸ் தனது கடமையைச் செய்துள்ளது. அவர்களைக் கிண்டல் செய்ய வேண்டாம் என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.