தீவிரவாதியின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட காஷ்மீர் மக்கள்….. கொரோனா வைரஸ் லாக்டவுன் விதிமுறைகளை மீறியதாக எப்.ஐ.ஆர். பதிவு….
ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதியின் இறுதி சடங்கில், லாக்டவுன் விதிமுறைகளை மீறி கலந்து கொண்ட உள்ளூர்வாசிகள் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.
ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் அந்த பகுதியை சுற்றி வளைத்தல் மற்றும் தேடுதல் நடவடிக்கையை தொடங்கினர். மேலும் தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும்போது அவர்கள் தப்பி ஓடுவதை தவிர்க்க இரவில் அந்த பகுதியில் வலுவான சுற்றி வளைத்தல் நடவடிக்கை மேற்கொண்டு இருந்தனர்.
அதன்பிறகு தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த என்கவுண்டரில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த தீவிரவாதி சஜாத் நவாப் தர் என்பவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட தீவிரவாதியின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. தீவிரவாதியின் இறுதி சடங்கு பிரார்த்தனையில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பேர் கலந்து கொண்டனர்.
தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி மற்றும் மத்திய அரசின் சமூக விலகல் அறிவுரைகளை மதிக்காமல் தீவிரவாதியின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட உள்ளூர்வாசிகள் மீது ஊரடங்கு விதிமுறை மீறல் தொடர்பான சட்டத்தின்கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.