தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: முழு விபரம்

 

தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: முழு விபரம்

சென்னை: தீபாவளி விடுமுறைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வருகின்ற 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட இருப்பதையடுத்து, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 21 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு முன்னரே அறிவித்திருந்தது.

ஆனால், தற்போது 5-ஆம் தேதியும் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த அதே அட்டவணைப்படி இன்று முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

setc

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சிறப்பு பேருந்துகளின் விபரம்:

ஈசிஆர் மார்க்கம்: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

தாம்பரம் சானடோரியம்(MEPZ): விக்கரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்.

பூந்தமல்லி பேருந்து நிலையம்: காஞ்சிபுரம், செய்யாறு, வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள்.

மாதவரம் சிறப்பு பேருந்து நிலையம்: ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.

மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.

சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ள சமயத்தில், கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம்.