தீபாவளிக்கு எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும்?-தமிழக அரசு அறிவிப்பு

 

தீபாவளிக்கு எப்போது பட்டாசு வெடிக்க வேண்டும்?-தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

சென்னை: தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது, காற்று மாசும், சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது, ஆதலால் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தலுக்குத் தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, உற்பத்திக்கோ தடை இல்லை என உத்தரவிட்டது.

மேலும்,  இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் உச்ச நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.