தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அஞ்சப்பர் ஊழியர்; அதிர்ச்சி தரும் வாக்குமூலம்!

 

தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட அஞ்சப்பர் ஊழியர்; அதிர்ச்சி தரும் வாக்குமூலம்!

25 வயதான இவர் கூடுவாஞ்சேரி அஞ்சப்பர் ஹோட்டலில் ஆர்டர் எடுக்கும்  வேலை செய்து வருகிறார்.  

சென்னை: ஊதிய பிரச்சனை காரணமாக அஞ்சப்பர் உணவகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தருமபுரி மாவட்டம் ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் உதயசங்கர். 25 வயதான இவர் கூடுவாஞ்சேரி அஞ்சப்பர் ஹோட்டலில் ஆர்டர் எடுக்கும்  வேலை செய்து வருகிறார்.  இவரது உறவினர் அஜித் என்பவர் சில வாரங்களுக்கு முன்பு வேறொரு கிளையில் பணத்தை கையாடல் செய்து விட்டதாக கூறி உதயசங்கரை அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.  

murder

இதைத் தொடர்ந்து உதயசங்கரின் மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சம்பள பணத்தை கேட்க சென்னை திநகர்  அஞ்சப்பர் தலைமை அலுவலகத்திற்கு நேற்று மாலை  சென்றுள்ளார். ஆனால் சம்பள பணத்தைக் கொடுக்காமல் அவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த  உதயசங்கர் தனது இருச்சகர வாகனத்திலிருந்த பெட்ரோலை பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 

murder

இதனால் அங்கிருந்த  போலீசார் அவரை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். உதயசங்கர் உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னை பெருநகர விரைவு நீதிமன்ற மாஜிஸ்திரேட் கிரிஜா ராணி அவரிடம் வாக்குமூலம் பெற்றார். அதில் அஞ்சப்பர் நிர்வாகத்தினர் தன்னை மிரட்டினர் என்றும்  அடித்து அவமதித்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இந்நிலையில் உதயசங்கர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து உதயசங்கர் அளித்த வாக்குமூலத்தின்  அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள பாண்டி பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஊதிய பிரச்சனையால் ஊழியர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.