‘தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ படத்துக்கு மத்திய பிரதேச அரசு தடை!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ படத்திற்கு மத்திய பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
மும்பை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ படத்திற்கு மத்திய பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய ‘தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் தத் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதியுள்ளார்.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், அவரது நிர்வாகத்தில் சோனியா காந்தியின் தலையீடு இருந்ததை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரில், அணு சக்தி ஒப்பந்தம், காஷ்மீர் பிரச்னை, மன்மோகன் சிங் மீன்ஸ் பிசினஸ் போன்ற அம்சஙகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ‘தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றுள்ளதால் இப்படத்திற்கு மத்திய பிரதேச அரசு தடை விதித்துள்ளது.
மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருக்கு பிற மாநிலங்களிலும் இப்படம் தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் நேரம் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொண்ட இப்படம் ரிலீசாவது தேர்தலை பாதிக்கும் என அரசியல் வல்லுநர்கள் ஒருபக்கம் கருத்துக் கூறி வருகின்றனர்.