தில்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரத போராட்டம்

 

தில்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரத போராட்டம்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தில்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கிறார்

புதுதில்லி: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தில்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கிறார்.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின், 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது.

தேர்தல் சமயத்தில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தும், சிறப்பு நிதி உதவியும் அளிக்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை.

இதனால், கடும் அதிருப்தியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். மேலும் எதிர்வரவுள்ள மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளை பலப்படுத்தும் முயற்சிகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தில்லியில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கிறார். ஆந்திர பவன் வளாகத்தில் காலை 8 மணிக்கு தொடங்கும் உண்ணாவிரதத்தில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆந்திர மாநில பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். உண்னாவிரதப் போராட்டத்துக்கு பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.