திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் ஆய்வு

 

திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் ஆய்வு

கஜா புயல் பாதித்த திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் ஆய்வு மேற்கொள்ளவார் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை: கஜா புயல் பாதித்த திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் ஆய்வு மேற்கொள்ளவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சூறையாடியுள்ளது. புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுதவிர, சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன. வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் ரூ.1000 கோடி மீட்பு பணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர் பழனிசாமி, புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.15,000 கோடி கோரியுள்ளார்.

அதேசமயம், அரசு தரப்பில் இருந்து இதுவரை முறையாக எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாவட்ட மக்கள் கூறி போராடி வருகின்றனர். மேலும் அவர்களை சந்திக்க செல்லும் அமைச்சர்களிடமும் அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வான் வழியாக புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர், தஞ்சாவூர் மாவட்டத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.

இந்த இரு மாவட்டங்களையும் முடித்த முதல்வர் நாகைக்கும், திருவாரூருக்கும் செல்வதாக இருந்தது. ஆனால் தற்போது மோசமான வானிலை காரணமாக அந்த பயணம் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல்வரின் இந்த முடிவும், ஹெலிகாப்டர் ஆய்வும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், கஜா புயல் பாதித்த திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி நாளை மறுநாள் ஆய்வு மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் மூலம் நாளை இரவு சென்னையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் அவர் அதிகாலை நாகப்பட்டினம் செல்வார் எனவும், நாளை மறுதினம் திருவாரூர், நாகை மாவட்டங்களில் அவர் ஆய்வு மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.