திருவாரூர் இடைத்தேர்தல்… டோக்கன் கொடுத்து வாக்கு பெறும் கட்சிகளுக்கு ஏமாற்றம்தான்: தமிழிசை

 

திருவாரூர் இடைத்தேர்தல்… டோக்கன் கொடுத்து வாக்கு பெறும் கட்சிகளுக்கு ஏமாற்றம்தான்: தமிழிசை

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது டோக்கன் கொடுத்து வாக்கு பெறும் கட்சிகளுக்கு ஏமாற்றமளிக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை: திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது டோக்கன் கொடுத்து வாக்கு பெறும் கட்சிகளுக்கு ஏமாற்றமளிக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி டிசம்பர் 3-ம் தேதி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா கடிதம் எழுதியிருந்தார் என கூறி திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. தலைமை தேர்தல் ஆணையத்தின் செயலுக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென விதிகளின் படி தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது. ஆனால் கஜா புயல் பாதிப்பினால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கட்சிகளின் வேண்டுதல்களையும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் களநிலவர அறிக்கையின்படி தேர்தலை ஒத்திவைத்தது வரவேற்கத்தக்கது.

திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. புயலுக்குப்பின்பு அங்கே தங்கி மருத்துவ நிவாரண பணி செய்த அனுபவத்தில் சொல்கிறேன் திருவாரூர் மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான், தேர்தல் அல்ல,அவர்கள் வாழ்வை மீட்டெடுப்பதுதான் தேவை, ஓட்டெடுப்பு அல்ல,தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. சில கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்க காட்டிய வேகத்தை நிவாரண பணிகள் செய்வதற்கு காட்டவில்லை, டோக்கன் கொடுத்து ஓட்டு வாங்க காத்திருந்த ஊழல் கட்சிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் நடக்காதது ஏமாற்றம் அளிக்கலாம்.

ஆனால் மக்கள் நிவாரணம் பெற வேண்டும் என்பதே கள நிலவரம். டெல்லியிலே தேர்தல் ஆணையத்திடம் தேர்தலை ஒத்திவைக்க வழக்கு தொடுத்து விட்டு இங்கே கூட்டணி கட்சிக்கு திருவாரூரில் ஆதரவு என்று இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்டுகள் வழக்கம் போல் எல்லாவற்றுக்கும் பா.ஜனதாவையும் பிரதமர் மோடியையும் குறை சொல்லும் குரல்கள். ஆனால் போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் நம் களப்பணி நாடாளுமன்ற் தேர்தல் நோக்கி தொடரட்டும் என கூறியுள்ளார்.