திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மலை உச்சியில் பரிகார பூஜை 

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மலை உச்சியில் பரிகார பூஜை 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மஹா தீபமேற்றி மலை உச்சியில் பரிகார பூஜைகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத்திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். 

thiruvannamalai

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியாக கடந்த 23 ஆம் தேதி மாலை 6 மணியளவில் கோயில் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மகாதீபம் ஏற்றப்படும்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று தீபத்தை வணங்குவார்கள். அதன்படி இந்த ஆண்டும் இரண்டாயிரம் பக்தர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

thiruvanamalai

திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுகிறார். அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையில் பக்தர்கள் மிதித்து ஏறுவதால் பரிகார பூஜை நடத்தப்படும். தீபத்திருவிழா முடிந்த சில நாட்களில் இந்த பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அப்போது அங்குள்ள அண்ணாமலையார் பாதத்திற்கும் அபிஷேகம் நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான பரிகார பூஜை நேற்று நடைபெற்றது. இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோயிலில் புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடத்தி சாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து புனித நீர் கலசங்கள் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பரிகார பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் அண்ணாமலையார் பாதத்துக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் அலுவலர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.