திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் !

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் !

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னிஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் . இந்தாண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

இந்தாண்டுக்கான 10 நாள் நடைபெறும் தீபத்திருவிழா நேற்று  காலை 5.31 மணிக்கு கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மகா தீப விழா கொடியேற்றப்பட்டது. இதையடுத்து, காலை 9 மணிக்கு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன்,  ஆகிய உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி விமானங்களில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

thiruvannamalai

 இரவு 8 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரர், ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளின் வீதியுலா நடைபெற்றது.

பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொடியேற்று விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இத்தனை சிறப்பு வாய்ந்த விழாவை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்வார்கள் மேலும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரும் இந்த கார்த்திகை தீப திருவிழாவின் கொடி ஏற்ற விழாவில் கலந்து கொண்டனர்.

thiruvannamalai

தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் 20-ந் தேதி காலை 6 மணி முதல் இரவு வரை நடைபெறும். 23-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியின் மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, கோயிலின் 9 கோபுரங்களும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.

தீபத்திருவிழா பாதுகாப்பு பணியில் பல்லாயிரக்கணக்கான போலீசார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மேலும், சிறப்பு பஸ்கள், ரெயில்களும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்படுகிறது.