திருமணமான 8 மாதத்தில் தூக்கில் தொங்கிய காதல் தம்பதி… உருக்கமான கடிதம் சிக்கியது!
திருமணம் முடிந்த பிறகு இவர்கள் திருவதிகையிலேயே தனிக்குடித்தனம் சென்றனர்.
பண்ருட்டி திருவதிகையை சேர்ந்தவர் அழகானந்தம். இவருடைய மகன் மணிகண்டன். இவர் டி.ராஜபாளையத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவரின் மகள் மகேஸ்வரியை குடும்பத்தார் சம்மதத்துடன் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த பிறகு இவர்கள் திருவதிகையிலேயே தனிக்குடித்தனம் சென்றனர்.
இந்நிலையில் மகேஸ்வரி 3 மாதம் கர்ப்பம் தரித்த நிலையில் மணிகண்டன் மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வருவதும் போவதுமாக இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மகேஸ்வரி கண்டித்தும் மணிகண்டன் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கம்போல் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வர கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மணிகண்டன் தூங்க சென்றுவிட, கோபத்திலும், மன உளைச்சலிலும் இருந்த மகேஸ்வரி வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நள்ளிரவில் போதை தெளிந்ததும் கண்விழித்த மணிகண்டன் மனைவி பிணமாக தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் மனைவியின் சடலத்தை இறக்கிவிட்டு அதே துப்பட்டாவால் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் கணவன் மனைவி இருவரும் வெளியில் வராததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு புதுமண தம்பதி பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பண்ருட்டி போலீஸுக்கு தகவல் கொடுத்தநிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் மணிகண்டன், மகேஸ்வரி ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மணிகண்டன் தற்கொலைக்கு முன்பாக எழுதிவைத்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், எனது குடிபழக்கத்தால் மனைவியையும், அவரது வயிற்றில் வளர்ந்த சிசுவையும் பறிகொடுத்து விட்டேன். அவர்கள் இல்லாத உலகத்தில் என்னால் வாழமுடியாது. நானும் என் மனைவி சென்ற இடத்திற்கே செல்கிறேன். அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்; மாமா என் அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள் என்று உருக்கமாக எழுதியிருந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.