திருமணமான ‘அந்த’ பெண்ணை என்னுடன் சேர்த்து வையுங்கள்: செல்போன் டவரில் ஏறி கலாட்டா செய்த வாலிபர்; பின்னணி என்ன?
திருமணமான தன் முன்னாள் காதலியை சேர்த்து வைக்குமாறு இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு: திருமணமான தன் முன்னாள் காதலியை சேர்த்து வைக்குமாறு இளைஞர் ஒருவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு நடேசன் நகரைச் சேர்ந்தவர் குணாளன். இவரது மனைவி லோகநாயகி. லோகநாயகி கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இதனால் அவரது கணவர் குணாளன் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை விசாரித்த போலீசார் லோகநாயகியை கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில்,தான் திருமணத்திற்கு முன் காதலித்து வந்த முரளி என்பவருடன் வாழ தாம் சென்றுவிட்டதாக போலீசாரிடம் லோகநாயகி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் லோகநாயகிக்கு அறிவுரை கூறி கணவருடன் செல்லுமாறு கூறினர்.
இதை தொடர்ந்து பூந்தமல்லி காவல்நிலையம் வந்த லோகநாயகியின் முன்னாள் காதலர் முரளி, லோக நாயகியை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி, அங்கிருந்த செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். கீழே இறங்குமாறு பலர் வலியுறுத்தியும், கீழே இறங்காத அவர் லோகநாயகியை வரவழைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனால் வேறு வழியின்றி லோகநாயகியை வரவழைத்த போலீசார் முரளியிடம் பேச்சு கொடுத்து வர சொல்லுமாறு கூறினர். அப்போது தன்னை விட்டு போகக்கூடாது என்று கோரிக்கை விடுத்த முரளி மேலே இருந்தவாறு லோக நாயகியிடம் சத்தியம் வாங்கினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பரபரப்பானது. இதையடுத்து கீழே இறங்கி வந்த முரளியை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.