திருமணத்தை மீறிய உறவு; கேராளவில் நிகழ்ந்த கொடூரக் கொலை…விபத்து நாடகம் அம்பலம்!

 

திருமணத்தை மீறிய உறவு; கேராளவில் நிகழ்ந்த கொடூரக் கொலை…விபத்து நாடகம் அம்பலம்!

திருமணத்தை மீறிய உறவால் கேரளாவில் நிகழ்ந்த கொடூரக் கொலை தொடர்பாக ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

திருவனந்தபுரம்: திருமணத்தை மீறிய உறவால் கேரளாவில் நிகழ்ந்த கொடூரக் கொலை தொடர்பாக ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று, 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சாலையோரம் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், உயிரிழந்தவரது பெயர் ஜிபின் வர்கீஸ் எனவும், எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வரும் அவர், தம்மனம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சாலை விபத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் என முதலில் கருதிய போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போது, விபத்துக்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் சந்தேகமடைந்துள்ளனர். மேலும், பிரேதப்பரிசோதனையிலும் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரிக்க 10 தனிப்படைகளை அமைத்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, கடந்த 9-ம் தேதி இரவு 12 மணிக்கு அஜீஸ் என்பவரது வீட்டுக்கு ஜிபின் சென்றதை உறுதி படுத்திய போலீசார், அவர் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும், ஜிபினை அடித்துக் கொலை செய்து விட்டு, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், சடலத்தையும், அவரது இருசக்கர வாகனத்தையும் போட்டுவிட்டு சாலை விபத்து போன்று நாடகமாடியுள்ளனர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெளியாகி வரும் தகவலின் அடிப்படையில், திருமணமான ஜிபினுக்கும், திருமணமான மற்றொரு பெண்ணுக்கும் இடையே திருமனத்தை மீறிய உறவு இருந்ததாகவும், இதையறிந்த அப்பெண்ணின் கணவர், அப்பெண்ணை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. அங்கும் சென்று இப்பிரச்னை பூதாகரமாகியுள்ளது. இதன் பின்னர், ஜிபினை வீட்டுக்கு வரவழைத்து பெண்ணின் குடும்பத்தினர் பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஜிபின் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.