திருப்பதி வைகுண்ட ஏகாதசி விழா : வி.ஐ.பிகளுக்கு லகு தரிசனம் 

 

திருப்பதி வைகுண்ட ஏகாதசி விழா : வி.ஐ.பிகளுக்கு லகு தரிசனம் 

திருப்பதியில்  நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவில் 18, 19 ஆம் தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும் என்றும் மேலும் இன்று  முதல் 19 ஆம் தேதி வரை கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் தேவஸ்தான அதிகாரி சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.

திருப்பதி :

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு நாளை நள்ளிரவு 1.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருமலையில் நேற்று நடைபெற்றது.

tirupathi

இந்த கூட்டத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாசராஜு கலந்து கொண்டு  செய்தியாளர்களிடம் கூறியதாவது 
வருடாந்திர பிரம்மோற்சவத்தின் கருட சேவை தினத்துக்கு அடுத்தப்படியாக வைகுண்ட ஏகாதசியின் போது ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட அனுபவங்களை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவும் 19 ஆம் தேதி வைகுண்ட துவாதசி விழாவும் நடைபெறுகின்றது. அதையொட்டி 18 ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 

tirupathi

முதலில் குறைந்த எண்ணிக்கையில் மிக முக்கியமான வி.ஐ.பி. பக்தர்கள் புரோட்டோக்கால் தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். வி.ஐ.பி. புரோட்டோக்கால் பக்தர்கள் அதிகாலை 3 மணிவரை தரிசனம் செய்யலாம். புரோட்டோக்கால் பக்தர்களுக்கு, ‘லகு’ தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வி.ஐ.பி. பக்தருக்கு 4 முதல், 6 டிக்கெட் வரை வழங்கப்படுகின்றன. 

அந்த டிக்கெட்டின் விலை ஆயிரம் ரூபாய் ஆகும். எம்.பி, எம்.எல்.ஏ, எம்.எல்.சி மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கு திருமலையில் ராம்ராஜு விடுதி அருகிலும், சீதா நிலையம் அருகிலும் தனியாகக் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. புரோட்டோக்கால் பக்தர்கள் வி.ஐ.பி. டிக்கெட் பெற வேண்டுமென்றால், நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். 

tirupathi

அந்த டிக்கெட் நேற்று  முதல் வழங்கப்படுகிறது. சிபாரிசு கடிதங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இன்று முதல் 19-ந்தேதி வரை கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

அதேபோல் முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு ஆண்டு கைக்குழந்தையோடு வரும் பெண் பக்தர்கள், அங்கப்பிரதட்சணம் செய்வோர், திவ்ய தரிசனத்தில் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைப்பாதைகளில் பாத யாத்திரையாக வருவோருக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை 5 மணியளவில் சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை வழிபட இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர்.

tirupathi

18, 19-ந்தேதிகளில் ஏழுமலையானை வழிபட மொத்தம் 44 மணிநேரம் இலவச தரிசன பக்தர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 18, 19-ந் தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும்.

தேவஸ்தான ஊழியர்களுக்கு 2 நாட்களில் 24 மணிநேரமும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 19-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் வைகுந்த வாயில் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

பக்தர்கள் வருகைக்கு ஏற்றவாறு குடிநீர், சாப்பாடு பானங்கள், சிற்றுண்டிகள் உள்ளிட்டவை 24 மணி நேரமும் வழங்கப்படும் என்றும் அதேபோல் பக்தர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள நிழற்பந்தல் அருகில் கழிவறை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் சீனிவாசராஜு தெரிவித்தார்.