திருப்பதியில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

 

திருப்பதியில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

பிரமோற்சவ விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டதும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சார்த்துறார்.

ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரமோற்சவ விழா உலக பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாத பிரமோற்சவ விழா,  கருட கொடியேற்றத்துடன் இன்று தொடங்கவிருக்கிறது. பிரமோற்சவ விழாவையொட்டி திருப்பதியில், திருமலை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வண்ணமயமான மின் விளக்குகள் எல்லாம் திருமலை முழுவதும் பொருத்தப்பட்டு முழு திருமலையும் காண்பதற்கு பூலோக வைகுண்டம் போல காட்சியளிக்கிறது.

tirupati

பிரமோற்சவ விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டதும், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சார்த்துறார். இன்று தொடங்கி, அடுத்து வரும் 9 நாட்களுக்கும் நடைபெறும் பிரமோற்சவ விழாவின் போது, காலை மாலை என இரு வேளைகளிலும் நான்கு மாட வீதிகள் வழியாக பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த கருடசேவை விழாவில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

tirupathi

பிரமோற்சவத்தை முன்னிட்டு, இந்த வருடம் திருமலையில் முதல்முறையாக அத்திவரதர் சிலை வைக்கப்பட்டிருப்பது பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. பிரமோற்சவ விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகிறார்கள். லட்சக்கணக்கான பக்தர்களின் வரவையொட்டி திருமலையில்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பொருட்கள் திருடு போவதை தடுப்பதற்காக கூடுதலாக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் திருமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கு. மேலும், திருமலையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.