திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் நாளை நடைபெறுவதால் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

 

திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம் நாளை நடைபெறுவதால் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில்  பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் எனும் கோவில் சுத்தம் செய்யும் பணி நாளை காலை 6.10-க்கு தொடங்கி 11 மணி வரை நடைபெறுகிறது. கோவில் வளாகத்தில் உள்ள ஆனந்த நிலையத்திலிருந்து வெளியே உள்ள மகாதுவாரம் வரைக்கும் இந்த பணி நடைபெறும். 

 

 

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி, 12-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை அங்குரார்ப்பணம்,13-ந்தேதி மாலை 4.45 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெறுகிறது .

 

கோயிலில் சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால் நாளை காலை 6.30 மணி முதல் நடைபெறும் அனைத்து  சேவைகளும் மற்றும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகிறது. இதையடுத்து கோவில் பிரதான நுழைவு வாயில் சாத்தப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது . காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை  . இதனால் 6 மணி நேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.

 

 

பின்னர் கோவில் கதவுகள் திறக்கப்பட்டு திருப்பதி ஏழுமலையானுக்கு நண்பகல் 12 மணிக்கு நைவேத்தியம் நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு 1 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்பபடுகின்றனர்.