திருச்செந்தூரில் நாளை வெகு விமர்சையாக நடைபெறுகிறது சூரசம்ஹாரம் விழா
ஆறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாக கருதப்படும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான நாளை சூரசம்ஹார விழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்கான கந்த சஷ்டி விழா கடந்த 8 ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனிதநீராடி விரதம் இருந்து சுவாமியை வழிபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம், காலை 10 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனை நடந்தது. இரவு 8 மணிக்கு தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளி கிரிபிரகாரம் வலம் வந்து கோயிலில் சேர்ந்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா நாளை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதனைஅடுத்து கோயில் நடை நாளை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் , 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும் காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான கடற்கரையில் சூரனை முருகர் வதம் செய்யும் நிகழ்ச்சி நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .
இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன மேலும் 3,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
திருச்செந்தூர் நகர் முழுவதும் 10 கண்காணிப்பு கோபுரங்கள்,70 சிசிடிவி கேமிராக்கள், 10 எல்இடி டிவிக்கள் ஆகியன பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டு கண்காணிக்க காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
இதனைஅடுத்து நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தவசுக் காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது.