திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் கார்த்திகை தீப விழா முன்னேற்பாடுகள் தீவிரம்!

 

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் கார்த்திகை தீப விழா முன்னேற்பாடுகள் தீவிரம்!

திருச்சி உச்சி பிள்ளையார் கோயிலில் மலை உச்சியில் கொப்பரையில் திரி வைக்கும் பணி தொடங்கியது.

 திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான கார்த்திகை தீப திருவிழா வருகிற 23-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.

kopparai

திருச்சி மலைக்கோட்டை கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மலை உச்சியில் உள்ள கொப்பரையில் திரி வைக்கும் பணி தொடங்கி உள்ளது.

மலைக்கோட்டையின் கீழ்ப்பகுதியில் மாணிக்க விநாயகர் சன்னதியும், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மை சன்னதியும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதியும் அமைந்துள்ளன.

மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக கோபுரம் அமைக்கப்பட்டு அதில் பிரமாண்ட செப்பு கொப்பரை வைக்கப்பட்டுள்ளது. இதில் தான் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.

 இந்தநிலையில் தாயுமானசுவாமி கோவிலில் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீப திருவிழாவுக்கான பூர்வாங்க பூஜை கடந்த 11-ந்தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து கொப்பரையில் திரி வைப்பதற்கும், எண்ணெய் ஊற்றவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

malai kottai

பருத்தி துணியில் 300 மீட்டர் நீளத்தில் திரியும், இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவை மொத்தம் 900 லிட்டரும் ஏற்பாடு செய்யப்பட்டன. திரியை கொப்பரையில் வைக்கும் பணி நேற்று மாலை தொடங்கியது.

கோபுரத்தின் மேலே உள்ள கொப்பரைக்கு திரியை கயிறு கட்டி பணியாளர்கள் இழுத்தனர். சிலர் கொப்பரையின் மேல் நின்று அந்த திரியை அதில் வைத்தனர்.

முதலில் ஒரு பகுதி திரி மட்டும் வைக்கப்பட்டு, அதில் எண்ணெய் ஊற்றும் பணி நடந்தது.தொடர்ந்து கொப்பரையில் மற்ற பகுதிகளில் திரி வைக்கப்பட்டு எண்ணெய் ஊற்றப்படும். 

இந்த பணி முழுமையாக முடிவடைய ஓரிரு நாட்கள் ஆகும்.வருகிற 23-ந்தேதி கார்த்திகை தீப திருவிழா அன்று மாலை 6 மணிக்கு கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் அணையாமல் தொடர்ந்து 3 நாட்கள் எரியும்.