திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!
அவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மூத்த அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 98. கடந்த 24 ஆம் தேதி சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் திமுக கொடி போர்த்தப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் உடலுக்கு முக ஸ்டாலின், கே. நேரு, டி.ஆர். பாலு உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ். அழகிரி, கீ.வீரமணி, முத்தரசன், ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இனமானவருக்கு திராவிட இனத்தின் இரங்கல் ….
கண்ணீர் அஞ்சலி ….. pic.twitter.com/WC3DbaKYu4
— K.N.NEHRU (@KN_NEHRU) March 7, 2020
க.அன்பழகன் மறைவையொட்டி திமுக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கட்சி சார்பிலான நிகழ்ச்சிகள் அனைத்தும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.