திமுகவினரை கெட்ட வார்த்தையால் திட்டிய சப்-இன்ஸ்பெக்டர்: மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள்: பின்னணி வீடியோ!

 

திமுகவினரை கெட்ட வார்த்தையால் திட்டிய சப்-இன்ஸ்பெக்டர்: மறியலில் ஈடுபட்ட தொண்டர்கள்: பின்னணி வீடியோ!

நாகர்கோவில்: போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தரக்குறைவாக பேசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகர்கோவிலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினர்.  கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன், நகரச் செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என  இப்போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து  போராட்டத்தில் ஈடுபட்ட  சிலர் போராட்ட பகுதியில் திறந்திருந்த  கடைகளை அடைக்கும்படி கூறியுள்ளனர். இதனால்  போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தி.மு.க.வினரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தரக்குறைவாக பேசியதாக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.விடம் தொண்டர்கள் புகார் கூறினர். சப்-இன்ஸ்பெக்டர் தன் பேச்சுக்கு உடனடியாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய சுரேஷ்ராஜன், அவர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் நடத்துவோம் என்றபடி அண்ணா பஸ் நிலையம் அருகில் உள்ள செம்மாங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

 

சுரேஷ்ராஜனுடன் ஏராளமான தி.மு.க.வினரும் சாலையில் அமர்ந்து சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். தி.மு.க.வினரின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்த  டி.எஸ்.பி. இளங்கோவன் திமுகவினரிடம்  சமரசம் செய்ய போய்  அது நடக்காததால்,  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திற்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து  சுரேஷ் ராஜனைச் சந்தித்து இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும், சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்உறுதியளித்ததால் சுரேஷ் ராஜனும், தி.மு.க.வினரும் போராட்டத்தை கைவிட்டனர். 

இச்சம்பவத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திமுகவினர், ‘தி.மு.க.வினரை போலீசார் வேண்டும் என்றே அவதூறாகப் பேசி வருகிறார்கள். தி.மு.க.வினர் மக்கள் பிரச்சனைக்காக மட்டுமே போராடுகிறார்கள்.  மாவட்ட எஸ்.பி. எங்களிடம் அளித்த உறுதி மொழிப்படி சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் நாளை முதல் நாங்கள் போராட்டத்தில் குதிப்போம்’ என்று தெரிவித்துள்ளனர்.