தாழ்த்தப்பட்ட சமுதாய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை? தேனியில் நிகழ்ந்த கொடூரம்

 

தாழ்த்தப்பட்ட சமுதாய சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை? தேனியில் நிகழ்ந்த கொடூரம்

தேனியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 12 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி: தேனியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 12 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு ராகவி (12)என்ற மகள் இருந்தார். ராகவி அங்கிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

இந்நிலையில், மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்,உறவினர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்தும் சிறுமியின் உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியை கண்டுபிடிப்பதாக உறுதியளித்த பிறகு தங்களது ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

இதற்கிடையே, மாணவி ராகவியை ஆதிக்க சாதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் வன்கொடுமை செய்து கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஒரு தாழ்த்தப்பட்ட சிறுமி என்பதால் ஆதிக்க சாதிக்காரர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற விஷமத்தனம் தற்போது பெரும்பாலானோரிடத்தில் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான விஷயம். சிறுமியை ஆனந்த் பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது உண்மை என்றால் அவருக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

அதுமட்டுமின்றி வட மாநிலங்களில் அடிக்கடி நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், சாதிய ரீதியான தாக்குதல்களும் தற்போது தமிழகத்தில் அதிகளவில் நடைபெற ஆரம்பித்திருக்கிறது கவலை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. எனவே இது போன்ற சம்பவங்கள் பரவாமல் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்து வன்கொடுமை செய்ய நினைப்பவர்களுக்கும், சாதிய ரீதியான தாக்குதல்களுக்கு அச்சாரம் போடுபவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.