தாமதமாகும் மகளின் வருகை: பரோலை நீட்டிக்க கோரி மனு அளிக்கவுள்ள நளினி!
நளினியின் ஒருமாத பரோல் முடிவடையவுள்ள நிலையில் பரோலை நீட்டிக்க விண்ணப்பிக்கவுள்ளதாக நளினியின் தாய் தெரிவித்துள்ளார்.
வேலூர்: நளினியின் ஒருமாத பரோல் முடிவடையவுள்ள நிலையில் பரோலை நீட்டிக்க விண்ணப்பிக்கவுள்ளதாக நளினியின் தாய் தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி கடந்த 25ஆம் தேதி வேலூர் மத்திய சிறையிலிருந்து, பரோலில் வெளியே வந்தார். வேலூரில் அவரது உறவினர் வீட்டில் தங்கியுள்ள அவர் மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறார். அதே சமயம் சிறைத்துறை விதிமுறைகளின்படி சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கணவர் முருகனை சிறையில் சந்தித்து பேசிய நளினி மகள் திருமணம் குறித்து ஆலோசித்தாக கூறப்படுகிறது. மேலும் நளினி பரோலை நீடிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யவிருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நளினியின் தாய் பத்மா கூறும் போது, ‘எனது மகள் நளினி, பேத்தி ஹரித்ராவின் திருமண எற்பாடுகள் செய்ய ஒருமாதம் பரோலில் வந்துள்ளார். பேத்தி ஹரித்ராவுக்கு இதுவரை 4 மாப்பிளை பார்த்து வைத்துள்ளோம். அவர் வந்து இறுதி செய்யவேண்டும். லண்டனில் உள்ள ஹரித்ராவுக்கு செப்டம்பர் மாதம் வரை தேர்வு நடைபெற உள்ளது. இதனால் தேர்வு முடிந்த பிறகு தான் அவர் தமிழகத்திற்கு வருவார். இதனால் நளினிக்கு மேலும் ஒருமாதம் பரோலை நீட்டிக்கக் கோரி நளினி தரப்பில் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே கைதி ஒருவருக்கு ஆறுமாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதை முன்னிறுத்தி பரோலை நீட்டிக்க விண்ணப்பிக்கவுள்ளோம்’ என்றார்.