தரங்கம்பாடி அழகியின் காலடியில் வீழ்ந்த சோகம் !?காவிரி 736;அத்தியாயம் -10

 

தரங்கம்பாடி அழகியின் காலடியில்  வீழ்ந்த சோகம் !?காவிரி 736;அத்தியாயம் -10

காவிரிக்கரை மனிதர்களின் கதைகளையும் சுமார் 736 கி.மீ தூரம் பயணித்து தேடி கோர்க்கிறது காவிரி எனும் இந்த சரடு

குடகில் தொடங்கி பூம்புகார் வரை நீண்டு கிடக்கிறது காவிரியின் கதை. எல்லா வகை மனிதர்களும் உலவிய காவிரி இன்று கிட்டத்தட்ட கைவிடப்பட்டுவிட்டது. இதற்கான காரணங்களோடு காவிரிக்கரை மனிதர்களின் கதைகளையும் சுமார் 736 கி.மீ தூரம் பயணித்து தேடி கோர்க்கிறது காவிரி எனும் இந்த சரடு. கைவிடப்பட்ட காவிரியின் வரலாறை ஆவணப்படுத்தும் முயற்சியாக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் “காவிரியின் இரண்டாயிரமாண்டு சரித்திரம்” என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படமானது பல்வேறு அத்தியாயங்களாக வெளியாகி வருகிறது.

அத்தியாயம் – 10

தரங்கம்பாடி அழகியின் காலடியில் வீழ்ந்த சோகம்

ஐரோப்பாவில் பிரான்ஸூம், இங்கிலாந்தும், இந்தியாவும் பாகிஸ்தானும் போல எப்போதும் சண்டை போட்டு கொண்டிருக்கும் நாடுகள். இரண்டாவது உலகப்போரில் ஹிட்லர் வந்து அவர்கள் இருவரையும் ஓரணியில் நிறுத்தும் வரையில் இந்த இரண்டு நாடுகளுக்குமான சண்டை ஓயவே இல்லை..

அப்படி 19-ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தும், பிரான்ஸூம் மோதிக்கொண்ட பல மோதல்கள் இந்தியாவிலும் எதிரொலித்தன. காரைக்காலில் இருந்த பிரெஞ்சு படைகளை ஆங்கிலேயர்கள் முறியடிக்க அங்கிருந்த பிரெஞ்சுக்காரர்கள் அகதிகளாக தரங்கம்பாடிக்கு வருகிறார்கள்.

அதில் நோயல் என்கிற சிப்பாயும் ஒருவர். தரங்கம்பாடியில் இருக்கும்போது நோயலின் மனைவி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். அவள்தான் கேத்தரின் நோயல். அழகான அந்த குழந்தையை ஊரே கொண்டாடியது. பிற்காலத்தில் அவள் பிரெஞ்சு சாம்ராஜ்ஜியத்தையே கலங்கடிக்கப்ப போகிறாள் என்பதை அறியாமலேயே.

சண்டை முடிந்து சமாதானம் ஆனபிறகு, நோயல் தன் மனைவி, மகளுடன் காரைக்கால் போனான். அவனுக்கு சந்திரநாகூர் கோட்டை கேப்டன் பதவியை கொடுத்து அங்கே அனுப்பினார் பிரெஞ்சு கவர்னர். கல்கத்தாவில் கழிந்த கேத்தரினின் இளைமைக்காலத்தில் பல காதல் புயல் கரை கடந்தன. அத்தனை பேரழகி கேத்தரின். பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஜார்ஜ் பிரான்ஸிஸ் கிராண்ட் என்கிற வீரன் தனது நண்பர்கள் சிலரோடு கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து கேத்தரினை துரத்துகிறான். ஒரு ஜமேதார் வந்து பிரான்ஸிஸை பிடித்து கட்டிப்போடுகிற அளவுக்கு போனது அன்றைய இரவு.

அவனையே பின்னால் மணந்து கொள்கிறாள் கேத்தரின். அந்த திருமண வாழ்க்கை மிக மோசமானதாக அமைகிறது. கேத்தரின் இரவுகள் வண்ணமயமாகவே இருந்தன. அவளை விட்டுப் பிரிந்து போகிறான் பிரான்ஸிஸ் கிராண்ட். கேத்தரின் புதுப்புது நட்புக்களை தொடர்கிறாள். அதில் ஒருவன் அவளை பாரிஸ்க்கு அழைத்து போகிறான்.

சற்று வயது முதிர்ந்த அவனை பாரிஸ்க்கு போனதும் கழட்டிவிடுகிறாள் கேத்தரின். மீண்டும் தனது இரவு வாழ்க்கைக்குத் திரும்புகிறாள். புதுப்புது துணைகளை தேடுகிறாள். அப்போது அறிமுகனாவர்தான் டெலிராண்ட். இது நடப்பது 1780-ல். டெலிராண்ட் சாதாண மனிதன் அல்ல… பிரெஞ்ச் புரட்சியின் கில்லெட்டினுக்கு தப்பிய பிரபுக்கள் தலையில் ஒன்று டெலிராண்டின் தலை. போதாதற்கு அவர் பிரெஞ்சு அரசன் மாவீரன் நெப்போலியனின் அமைச்சர் வேறு. 

இவர்களின் காதல் கதை நெப்போலியன் காதுக்கு போக வேறு வழியில்லாமல் கேத்தரினை மணந்துகொள்கிறார் டெலிராண்ட். அவள் இந்தியக்காரி மிகவும் அழகி நான் பார்த்த பெண்களிலேயே மிகவும் சோம்பேறி அவள்தான் என்று தனது மனைவி கேத்தரினை வர்ணிக்கிறான் டெலிராண்ட். விரைவில் டெலிராண்ட் அவளைவிட்டு விலகிவிட கேத்தரின் மீண்டும் சுதந்திர பறவையாகிறாள் கேத்தரின்.

அவன் காலத்தில் அவளைப் பார்த்த ஆண்கள் எல்லோரும் அவளை காதலித்தார்கள் அவளை பார்த்த பெண்கள் பொறாமைப்பட்டார்கள். தரங்கம்பாடிக்கு அகதியாக வந்த இடத்தில் பிறந்த அந்த பெண், பாரிஸ் நகரத்து பிரமுகர்கள் அத்தனை பேரையும் தனது காலடியில் விழவைத்தாள். தன் அழகால் அன்றைய மன்னன் நெப்போலியன் மனைவி , ஜோஸபினுக்கு அடுத்து அதிகாரமுள்ள பெண்ணாக விளங்கினாள். பிரெஞ்சு பிரபு குடும்ப வாரிசாகி சொத்து அத்தனையும் இழந்து தன் கடைசி காலத்தை தனிமையிலும், மது போதையிலும் கழித்து 64 வயதில் பாரிஸில் இறந்து போனாள் கேத்தரின் நோயல் கிராண்ட்….

தொடரும்

பூவாடைக்காரியை குலசாமியாக வணங்குவது ஏன்? அதிர்ச்சி தரும் வரலாற்று நிஜம்