தயாநிதி மாறன் மீது அமைச்சர் ஜெயக்குமார் வழக்குத் தொடர தமிழக அரசு ஒப்புதல்!
அமைச்சர் ஜெயகுமாருக்குத் தெரியாமல் எந்த முறைகேடும் நடந்திருக்காது. அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் அடுக்கடுக்காக குற்றங்கள் அம்பலமாகி வருகிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய திமுக எம்.பி தயாநிதிமாறன், “அமைச்சர் ஜெயகுமாருக்குத் தெரியாமல் எந்த முறைகேடும் நடந்திருக்காது. அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும். எத்தனையோ மாணவர்கள் அரசாங்க உத்தியோக கனவுடன் தேர்வு எழுதி வரும் நிலையில், அரசு அதனைக் கேலிக்கூத்தாக்கி வருகிறது” என்று கூறினார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், “அரசியலில் ஆதாயம் பெறுவதற்காகத் தேவையில்லாத குற்றச்சாட்டை வைத்து வருகின்றனர். எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் தான். அதனால், தயாநிதி மாறன் நீதிமன்றத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும். அவர் மீது வழக்குத் தொடர தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் அமைச்சர் ஜெயகுமாருக்குச் சம்பந்தம் உள்ளதாக தயாநிதி மாறன் கூறியதால் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடரலாம் என்று தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.