தமிழ் ராக்கர்ஸில் விஷாலின் ‘ஆக்ஷன்’: காரித்துப்பும் இயக்குநர்!

 

தமிழ் ராக்கர்ஸில் விஷாலின் ‘ஆக்ஷன்’: காரித்துப்பும் இயக்குநர்!

நாசமாய்ப் போய்விடும் நம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு. இதைச் சில முறை வாய்மொழிப் புகாராகவும் கொடுத்தாகி விட்டது. ஏன் என்று கேட்கத்தான் யாருமில்லை.

சினிமாவுக்கு எதிராக உள்ள பைரசி பிரச்சினைகளை ஒழிப்பேன் என்று கூறிய விஷால் தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளாரா என்று தெரியவில்லை. அப்படி ஈடுபட்டிருந்தாலும் அதற்கு பெரிதாக பலனில்லை.  காரணம் அவரது  ஆக்ஷன் திரைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக ஹெச்3 சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் கஸாலி இயக்கத்தில் வெளியான மனுசனா நீ திரைப்படம் வெளியான 2 நாட்களுக்குள் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடையச் செய்தது.  இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரியில் உள்ள திரையரங்கில் அவரது படம் திருட்டு தனமாக எடுக்கப்பட்டது தொடர்பாக  திரையரங்க உரிமையாளர், ஆபரேட்டர் ஆகியோரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும் பைரசி பிரச்னை ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில் இதுகுறித்து  கஸாலி தனது பேஸ்புக் பக்கத்தில், 

தமிழ்ராக்கர்ஸ்,
தமிழ்கன்,
மூவீஸ்தாஸ்,
தமிழ் மாஸ்டர்…
என்று இன்னும் என்னென்னவோ தமிழ்ப் பெயர்களில் திருட்டுக் கும்பல் நம் தமிழ்ப் படங்களை வெளிவந்த அன்றே சுடச்சுட தியேட்டர்களில் திருடி நெட்டில் ஏற்றுகிறார்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர் நடித்த, அதே சங்கத்தில் மிக அதிகப்படியாக வோட்டு வாங்கி செயற்குழு உறுப்பினராக ஜெயித்தவர் இயக்கிய ‘ஆக்சன்’ திரைப்படம் இன்றே தியேட்டர்களில் திருடப்பட்டு வெளிவந்து விட்டது.

நன்றாகத் தெரிகிறது… நம் தமிழ்நாட்டுத் தியேட்டர்களிலிருந்துதான் திருடப்படுகிறது என்று!

முன்பு வரை, அதாவது எட்டு மாதங்களுக்கு முன்பு வரை ‘கியூப்’ நிறுவனத்திடம் திருட்டுப் பிரிண்ட் மற்றும் ரூ. 59,000/- கொடுத்தால் ‘எந்தத் தியேட்டரிலிருந்து திருடப்பட்டது’ என்று ‘சிவொலுசன்’ அனாலிசிஸ் செய்து ரிப்போர்ட் கொடுப்பார்கள்.

ஆனால், கடந்த எட்டு மாதங்களாக திருட்டுப் பிரிண்டையும், பணத்தையும் வாங்கிக் கொண்டு
‘எங்கள் புரஜக்டர் இருக்கும் எந்தத் தியேட்டர்களிலிருந்தும் திருடப்படவில்லை’ என்று சொல்லி விடுகிறார்கள்.
அதற்கு ‘சித்திரம் பேசுதடி – 2’ முதற்கொண்டு பல படங்களை உதாரணம் சொல்லலாம். தியேட்டர்காரர்களுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அவர்களைக் காப்பாற்றுகிறார்களாம்..! விளங்கவா செய்யும் நம் தொழில்?
நாசமாய்ப் போய்விடும் நம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு.
இதைச் சில முறை வாய்மொழிப் புகாராகவும் கொடுத்தாகி விட்டது. ஏன் என்று கேட்கத்தான் யாருமில்லை.

vishal

தேர்ந்தெடுத்த அமைப்புதான் கையாலாகாமல் காணமல் போய்விட்டது.
இப்போது இருக்கும் ஆலோசனைக் குழு ஏன் வாழாவிருக்கிறது?

என் ‘மனுசனா நீ’ படத்தைத் திருடிய கிருஷ்ணகிரி ஸ்ரீகிருஷ்ணா தியேட்டர் உரிமையாளர் திருடன் கைது செய்யப்பட்டு இப்போதுவரை கேஸ் நடக்கிறது, அல்லது நடக்கிறதாக நம்பிக் கொண்டிருக்கிறேன்.

தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ஆலோசனைக் குழுவிடம் ‘நான் இதுவரை தியேட்டர் பைரஸிக்காக எடுத்த நடவடிக்கைகளின் தொகுப்பை’ 26 அட்டாச்மெண்ட்களோடு சுமக்க முடியாத வெயிட்டோடு பெரிய ஃபைலில் இட்டு, கடிதம் கொடுத்தேன்.
மூன்று மாதங்களைத் தாண்டிவிட்டது.இலவம்பஞ்சு மரத்தின் கீழ் கிளிபோல் உட்கார்ந்திருக்கிறேன். பார்ப்போம்.

gazhali

என்ன ஆனாலும் சரி, என் படத்தைத் திருடியவனை நான் விடுவதாக இல்லை.

இன்று ஆக்சன்,
நாளை சங்கத் தமிழன்.

இது ஒரு தொடர்கதை. கண் முன்னே திருட்டுப்பயல்களை வைத்துக் கொண்டு வாராவாரம் பைரஸி பற்றிப் பேசுகிறோம்.

காத்திருக்கிறேன்… ஒருநாள் விடியாமல் போகாது;’ என்று பதிவிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.