தமிழ்நாட்டில் முதல் முறையாக பதிவு திருமணம் செய்த திருநங்கை ஸ்ரீஜா: மகிழ்ச்சியில் திளைக்கும் மூன்றாம் பாலினத்தவர்கள்!

 

தமிழ்நாட்டில் முதல் முறையாக பதிவு திருமணம் செய்த திருநங்கை ஸ்ரீஜா: மகிழ்ச்சியில் திளைக்கும் மூன்றாம் பாலினத்தவர்கள்!

தமிழ் நாட்டில் முதல்முறையாகத்  திருநங்கை ஒருவரின் திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது

தூத்துக்குடி: தமிழ் நாட்டில் முதல்முறையாகத்  திருநங்கை ஒருவரின் திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகன் அருண்குமார். இவர் டிப்ளமா முடித்துள்ளார். இதே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சிராமன் – வள்ளி தம்பதியர். இவர்களது மகள் ஸ்ரீஜா. இவர் பி.ஏ. படித்துள்ளார். திருநங்கையான ஸ்ரீஜாவுக்கும், அருண்குமாருக்கும் இருவரது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டன.

srija

இவர்களது திருமணம், அப்பகுதியில் உள்ள  ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டது. திருமண நாளான கடந்த அக்டோபர்  மாதம் 31 ஆம் தேதி  மணமக்கள், உறவினர்களுடன்  கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கோவில் நிர்வாகத்தினர் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று  கூறினர். இதனால் மணமக்கள் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இளைஞருக்கும் திருநங்கைக்கும் நடக்கவிருந்த திருமணம், கோவில் நிர்வாகத்தால் தடைப்பட்டது அப்பகுதியில் சலசலப்பை  ஏற்படுத்தியது.

srija

இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் கோவில் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகளுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து கோவில் அலுவலகத்திற்கு வந்த மத்தியபாகம் போலீசார் திருநங்கைகள் மற்றும் கோயில் அதிகாரிகளுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அருண்குமார் ஸ்ரீஜாவுக்கு திருமணம் நடைபெற்றது.

srija

இருப்பினும் இந்த திருமணத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் அதற்கான ரசீது வழங்காததால், இவர்களது திருமணம் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் திருநங்கையின் திருமணத்தைத் தமிழ்நாடு திருமண பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புதுமண தம்பதிகள் இருவரும் தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். 

srija

இந்நிலையில்  திருநங்கை ஸ்ரீஜா – அருண்குமார் இருவருக்கும்  தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்துப் பதிவு திருமணம் நடந்தது. இதன்மூலம் தமிழ் நாட்டில்   திருநங்கை ஒருவரின் திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.  இதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.