தமிழக மாணவர் டெல்லியில் தற்கொலை: தொடர் விசாரணையில் காவல்துறை!?
டெல்லியில் படிக்கும் தமிழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி: டெல்லியில் படிக்கும் தமிழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிஷி ஜோசுவா. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்தார். இவர் நேற்று கல்லூரி நூலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த கல்லூரி நிர்வாகம் போலீஸ், மற்றும் மாணவரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தது. இதைத் தொடர்ந்து ரிஷி ஜோசுவாவின் உடல் சப்தர்ஜங் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாணவர் ரிஷு ஜோசுவாவை நேற்று காணவில்லை என்றும் அதன்பிறகு தான் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தேர்வு ஒன்றை எழுதாததன் காரணமாக ரிஷு ஜோசுவா மன அழுத்தத்திலிருந்ததாகவும், அதன் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலை செய்வதற்கு முன்னதாக மாணவர் தன்னுடைய பேராசிரியருக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். இதனால் இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக இதே பல்கலை கழகத்தில் படித்து வந்த முத்துகிருஷ்ணன் என்ற தலித் மாணவர், கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.