தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும்

 

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

2019-20-ஆம் நிதிஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதனை தாக்கல் செய்தார். தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20-ஆம் ஆண்டில் ரூ.44,176 கோடியாக இருக்கும். வரும் நிதி ஆண்டில் தமிழ் நாட்டின் கடன் ரூ.3.97 லட்சம் கோடியாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு. காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு ரூ.111.57 கோடி ஒதுக்கீடு. பயிர் காப்பீடு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.621.59 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு ஆதரவும், விமர்சனங்களும் கலவையாக வந்துள்ளன. ஏழை எளிய மக்களுக்கு பயன்படாத உதவாக்கரை பட்ஜெட் என தமிழக பட்ஜெட்டை குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்ததையடுத்து, பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பின், சபாநாயகர் தனபால் தலைமையில் அவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அதில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை வருகிற 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 4 நாட்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான பொது விவாதம் 3 நாட்கள் நடைபெறும். தொடர்ந்து வருகிற 14-ம் தேதி நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிப்பார்.