தமிழக அரசியலை நார் நாராய் கிழித்து தொங்கவிடும் அர்ஜூன் ரெட்டி
அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா தமிழக அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
சென்னை: அர்ஜூன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா தமிழக அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் அவரை பார்த்து மிகவும் பவ்யமாக நடந்து கொண்டனர். அவர்களது பவ்யத்தின் அளவு என்பது ஜெயலலிதா அமர்ந்திருந்தால் அவரது காலில் உடனடியாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிடுவது, அவருக்கு குனிந்து வணக்கம் வைக்கிறேன் என்ற பெயரில் நாற்காலியே இல்லாமல் காற்றில் அமர்ந்து வணக்கம் வைப்பது, அவர் ஹெலிகாப்டரில் சென்றாலும் தரையில் விழுந்து கும்பிடுவது, காரில் சென்றால் டயரை தொட்டு வணங்குவது என வரம்பு மீறி சென்று கொண்டிருந்தனர். அவர்களின் இந்த செயல்பாடு மிகப்பெரிய விவாதத்திற்குள்ளானது. மேலும் தற்போது வரை அதிமுக அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் கிண்டலுக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழில் நோட்டா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாக இருக்கிறார். அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியலில் உங்களுக்கு வேடிக்கையாக தோன்றிய விஷயம் ஏதாவது இருக்கிறதா? என்ற கேள்வியை நெறியாளர் முன்வைத்தார்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், முதல்வர் ஹெலிகாப்டரில் செல்லும்போது தரையில் நிற்கும் அவருடைய கட்சியினர் விழுந்து கும்பிடுவது, ஹெலிகாப்டரில் செல்பவருக்கு எப்படியும் அது தெரிய போவதில்லை.அதேபோல் வெளியில் தெரியும்படி தங்கள் அபிமான தலைவரின் புகைப்படத்தை சட்டை பையில் வைத்திருப்பதை கவனித்தேன்.
நோட்டா திரைப்படத்தில் நாசர் மிகப்பெரிய அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். அவருடைய புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்திருப்பவர்கள் அவரை பார்த்தவுடன் தரையில் விழுந்து கும்பிடுவார்கள். அப்பொழுது எந்நேரமும் குனிந்தே இருக்காதீர்கள் நிமிர்ந்து முகத்தை பாருங்கள் இல்லையென்றால் நாளை எனக்கு சிலை வைக்கும்போது என் முகம் எப்படி இருக்குமென்று தெரியாமல் வேறு யார் முகத்தையாவது வைத்துவிடுவீர்கள் என நாசர் சொல்வார் என்றார்.