தமிழகத்தை அச்சுறுத்திய தொண்டை அடைப்பான் நோய் மீண்டும் பரவுகிறது: மருத்துவர்கள் எச்சரிக்கை!
காரிணிபாக்டீரியம் டிப்தீரியா’ என்னும் பாக்டீரியாவால் தொண்டை அடைப்பான் நோய் ஏற்படுகிறது.
சென்னை: தமிழகத்தில் தொண்டை அடைப்பான் நோய் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வேகமாக பரவி வருவதாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காரிணிபாக்டீரியம் டிப்தீரியா’ என்னும் பாக்டீரியாவால் தொண்டை அடைப்பான் நோய் ஏற்படுகிறது. இந்நோய், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தொண்டையில் ஒரு ஜவ்வு உருவாகும். இந்த ஜவ்வு வீங்கி, தொண்டையை அடைக்கும். உணவை சாப்பிடவும், விழுங்கவும் முடியாது.
இந்நிலையில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தை உலுக்கிய இந்த நோயானது களையப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதுகுறித்து கூறும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் ஜெயச்சந்திரன், முறையான தடுப்பூசி போடாமல் இருந்த வந்த சில குழந்தைகள் சிலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அசோக் நகரைச் சேர்ந்த 12 வயது சிறுமி உட்பட இதுவரை 7 குழந்தைகள் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டை அடைப்பான் நோய்க்கான தடுப்பூசி தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படும் நிலையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு 6 வாரம், 10 வாரம், 14 வாரம் மற்றும் ஒன்றரை வயதில் முறையாகத் தடுப்பூசி போடுவதன் மூலம் இந்த நோயை தடுக்க முடியுமென்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.