தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோயில்களில் நாளை பகல் பத்து உற்சவம் தொடக்கம் 

 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோயில்களில் நாளை பகல் பத்து உற்சவம் தொடக்கம் 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அனைத்து வைணவ கோயில்களிலும் பகல் பத்து உற்சவம் நாளை முதல் கொண்டாடப்படுகிறது. 

தமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை
முன்னிட்டு அரையர் சேவை நடக்கிறது.

sri rangam

வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை ஏகாதசி முதல் பஞ்சமி வரை உள்ள நாட்களை இராப்பத்து என்றும் அழைக்கின்றனர்.

பகல் பத்து, இராப்பத்து உற்சவங்களில் ஆழ்வார்களின் பிரபந்தங்கள் முழுவதுமாக எம்பெருமான் முன்பு பாராயணம் செய்யப்படுகிறது.

திருக்கோயில்களில் திருமாலின் திருவுருவம் நடுவில் பிரதானமாக எழுந்தருளியிருக்க ஆழ்வார்கள் ஒரு புறமும் ஆச்சாரியார்கள் ஒரு புறமும் எழுந்தருளியிருக்கக்கூடிய இந்த அற்புதக் காட்சியை இந்த இருபது நாட்கள் மட்டுமே தரிசிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும்.

sri rangam

பொதுவாகவே திருக்கார்த்திகை முதல் விஷ்ணு ஆலயங்களில் உள்ள மூலவர்களுக்கு தைலக்காப்பு நடைபெற்றுவிடுவதால் மூலவர் தரிசனம் கிடையாது.

வைகுண்ட ஏகாதசியன்று முதல் அந்த தரிசனம் மீண்டும் கிடைக்கும். முதல் பத்து நாட்கள் திருமங்கையாழ்வாரை முன்னிட்டு கொண்டாடப்படுவது மரபு. இதனை திருமொழித் திருநாள் என்பார். 

இராப்பத்து கடைசி நாளில் நம்மாழ்வார் முக்தி அடைவதாகவும், மீண்டும் நம் பொருட்டு அரங்கன் அவரை நமக்குத் திரும்ப அளிப்பதாகவும் திருவிழா அமையும்.

ஆழ்வார் கோஷ்டியிலுள்ள நம்மாழ்வாரை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தாங்கலாக எழுந்தருளச் செய்து கொண்டு பெருமானின் திருவடியில் சேர்ப்பார்கள். 

srirangam

அப்போது ஆழ்வார் திருவுருவம் முழுவதுமாக துளசி தளங்களால் மூடப்படும். இது நம்மாழ்வார் மோட்சம் அடைந்துவிட்டதை குறிக்கும். பிறகு பக்தர்கள் சார்பில் உலகம் உய்ய எம்பெருமானிடம் அர்ச்சகர், நம்மாழ்வாரைத் தந்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார். 

அப்போது சில குறிப்பிட்ட பிரபந்தங்கள் பாராயணம் செய்யப்படும். பின்பு துளசி தளங்களை விலக்கி மீண்டும் ஆழ்வார் கைத்தாங்கலாக எழுந்தருளச் செய்து கொண்டு அவருக்குரிய ஸ்தானத்தில் அமர்த்துவர். இதுவே நம்மாழ்வார் மோட்சம் எனப்படும் வைபவமாகும்.

sri rangam

ஒவ்வொரு திருமால் திருக்கோயிலிலும் இம்முறை கடைபிடிக்கப்படும். இதனை திருவடிதொழல் என்று அழைப்பார்கள். இதை தரிசிப்பவர்கள் பாக்கியசாலிகள். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டம் சென்றவர் யாரும் இல்லாமையாலே அது மூடப்பட்டிருந்தது. 

ஆழ்வார் வைகுந்தம் புகுந்தபோதுதான், அதாவது வைகுண்ட ஏகாதசி நன்னாளான மார்கழி சுக்ல ஏகாதசி அன்றுதான் அது திறக்கப்பட்டது. இதனைக் கொண்டாட திருமங்கையாழ்வார் ஏற்படுத்திய வைபவமே வைகுண்ட ஏகாதசி திருவிழா என்பர் நம் முன்னோர்கள்.

இந்த வருடம் இவ்விழா டிசம்பர் 19 ஆம் தேதி அனைத்து பிரசித்தி பெற்ற வைணவ கோயில்களிலும் நடைபெறுகிறது. இவ்விழாவில் பரந்தாமனை தரிசித்து சகல நன்மைகளையும் பெறலாம்.