தமிழகத்தில் அரசியல் அதிசயம் நடக்கும்: சஸ்பென்ஸ் வைக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

 

தமிழகத்தில் அரசியல் அதிசயம் நடக்கும்: சஸ்பென்ஸ் வைக்கும் தங்க தமிழ்ச்செல்வன்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு அரசியல் அதிசயம் நடக்கும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு அரசியல் அதிசயம் நடக்கும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலை  முன்னிட்டு தமிழக அரசியல் களம்  சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. திமுக, அதிமுக தலைமைகளின்  கீழ் கூட்டணிகள் அமைந்துள்ளன. இதையடுத்து கமலின் மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிடவை கூட்டணி குறித்துப் பேசி வருகின்றன. அதே சமயம் திமுக, அதிமுக, தேமுதிக  கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தங்கள் கட்சி உறுப்பினர்களை விருப்ப மனுப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளன. 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், ‘பாஜக எதிர்ப்பு அலையும் அதிமுக எதிர்ப்பு அலையும் இணைந்து  அமமுகவை வெற்றி பெற செய்யும்.  நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு அரசியல் அதிசயம் நடக்கும்.  அமமுகவின் அமோக வெற்றி செய்தியாக இருக்கும். இதை நான்  கற்பனையாகச் சொல்லவில்லை. மக்கள் மனநிலையை அறிந்து தான் சொல்கிறேன்.  விரைவில் தேர்தல் முடிவுகள் இதை உங்களுக்குப் பறைசாற்றும். 

அதே சமயம் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை அதை தள்ளி வைக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது. அதிமுக பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகும். அதனால் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் இந்த கூட்டணியைப் புறக்கணிப்பார்கள். அமமுகவின் கூட்டணி குறித்து ஒரு வாரத்திற்குள் தெரியவரும். தற்போது எஸ்.டி.பி.ஐ உடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் கமல் ஹாசனுடன் கூட்டணி குறித்து பேசவில்லை’ என்றார்.