தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் அனல் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் அனல் காற்று வீசும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

சென்னை: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழகத்தில்  வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனது. இதனால்  நீர் நிலைகள் பல ஊர்களில் வறண்டு காணப்படுகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் முன்பே பல ஊர்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. சில ஊர்களில் 100 டிகிரி வெப்பநிலை காணப்படுவதால் மக்கள் புழுக்கம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 6, 7ம் தேதிகளில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பூர், தருமபுரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் நாமக்கல், வேலூர், கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும், உள் தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.