தண்டவாளத்துக்கு அடியில் படுத்து சிறு காயமும் இன்றி உயிர் பிழைத்த நபர்: உண்மை நிலவரம் என்ன?

 

தண்டவாளத்துக்கு அடியில் படுத்து   சிறு காயமும் இன்றி உயிர் பிழைத்த நபர்: உண்மை நிலவரம் என்ன?

ஐதராபாத்: ரயில் கடந்துசென்றபோது தண்டவாளத்துக்கு அடியில் படுத்த ஒருவர் சிறு காயமும் இன்றி உயிர் தப்பியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் ரயில் நிலையத்திற்கு வெளியூரிலிருந்து வந்திறங்கிய பயணி ஒருவர் ரயில் மேம்பாலம் மீது ஏறி செல்லாமல்  தண்டவாளத்தைக் கடந்து ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற முயன்றார்.ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் அடியில் புகுந்து செல்ல அவர் முயன்றுள்ளார். 

ஆனால் அதே நேரத்தில் அந்த ரயில் புறப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பயணி தண்டவாளங்களுக்கு இடையே படுத்துக் கொண்டார். சுமார் 5 நிமிடம் ஓடும் ரயிலுக்கு கீழே படுத்திருந்த அவர், ரயில் சென்றபின் சிறு காயம் கூட இல்லாமல் உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்.

இந்தச் சம்பவம் பற்றி கூறியுள்ள அனந்தபுரம் ரயில்வே போலீசார், ‘இதுகுறித்து எங்களுக்குப் புகார் ஏதும் வரவில்லை. ஆனால் நாங்கள் நடத்திய விசாரணையில் பயணி ஒருவர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்று ரயிலுக்கு அடியில் சிக்கி உயிர் பிழைத்து பின்னர் புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது’ என்று கூறியுள்ளனர்.