தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான உதவித்தொகையை நிறுத்திய ஆஸ்திரேலியா

 

தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான உதவித்தொகையை நிறுத்திய ஆஸ்திரேலியா

சிட்னி: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ளவர்களுக்கு அந்நாட்டு அரசு உதவித் தொகையை நிறுத்தியுள்ளது.

சொந்த நாட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சக் கோரியிருப்பவர்களுக்கான உதவித் தொகையினை ஆஸ்திரேலிய அரசு நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது குறித்து ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள அகதி கவுன்சிலின் பிரதிநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வரும் மாதங்களில் மேலும் பலருக்கு அரசின் உதவி நிராகரிக்கப்படக்கூடும் எனக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இம்மாற்றங்கள் குறித்து பேசப்பட்டபோது, இது வீடற்றுள்ள, வறுமையிலுள்ள ஆயிரக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்களை கடுமையாக பாதிக்கும் என அகதிகள் நல அமைப்புகள் எச்சரித்திருந்தன. இந்த உதவித்தொகை குறுகிய காலத்துக்கே திட்டமிடப்பட்டது எனவும் தஞ்சக் கோரிக்கையாளர்கள் அவர்களின் தேவையை அவர்களே பூர்த்திக் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறது ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம்.

தற்போதைய சூழலில் உதவித் தொகை மறுக்கப்பட்டுள்ள கப்ரிலீ மத்திய கிழக்கு நாட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். மெல்போர்னில் வசிக்கும் அவர் தொண்டு பணிகள் மற்றும் ஆசிரியர் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் போதுமான ஆங்கிலப் புலமை இல்லாமையால் முறையான வேலை எடுக்க முடியவில்லை எனக் கூறியிருக்கும் அவர், “என்னுடைய வீட்டு வாடகை இதர அடிப்படை செலவுகளைக் கூட என்னால் செலுத்த முடியவில்லை என வேதனை தெரிவித்திருக்கிறார்.

Status Resolution Support Services என்று அழைக்கப்படும் உதவித்தொகை திட்டம், ‘வேலையற்றோருக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்துக்குள் வராத தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு உதவி வழங்கவதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கின்றது. இத்திட்டத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இரக்கமற்றது என தீவிர வறுமை மற்றும் மனித உரிமை விவகாரங்களை கவனிக்கும் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் விமர்சித்திருக்கிறார்.