தங்கத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்….. ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் இறக்குமதி குறைந்தது…

 

தங்கத்தையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்….. ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கம் இறக்குமதி குறைந்தது…

கடந்த மார்ச் மாதத்தில் நம் நாட்டின் தங்கம் இறக்குமதி ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 25 டன்னாக குறைந்தது.

சர்வதே அளவில் தங்கம் பயன்பாட்டில் நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தங்கத்தை வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்காமல் அதனை சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் நம்மவர்கள் சிறுக சிறுக என்றாலும் முடிந்த அளவுக்கு தங்கத்தை வாங்குகின்றனர். மேலும் திருமணம் உள்பட சுபநிகழ்ச்சிகளில் தங்கம்தான் பிரதானமாக விளங்குகிறது. இது போன்ற காரணங்களால் நம் நாட்டில் தங்கம் பயன்பாடு அதிகமாக உள்ளது.

தங்க கட்டிகள்

அதேசமயம் நம் நாட்டில் தங்கம் உற்பத்தி மிகவும் சொற்பமான அளவிலேயே நடைபெறுகிறது. இதனால் நாட்டின் தங்கம் தேவை இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் நம் நாட்டின் தங்கம் இறக்குமதி கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 25 டன்னாக குறைந்தது. உள்நாட்டில் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்தது மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக நடைமுறையில் உள்ள லாக்டவுனால் தங்கத்தின் தேவை குறைந்ததே இதற்கு காரணம்.

தங்க பிஸ்கட்கள்

2019 மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது சென்ற மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி (அளவு அடிப்படையில்) 73 சதவீதம் குறைந்து 25 டன்னாக குறைந்துள்ளது. 2019 மார்ச் மாதத்தில் 93.24 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது. மதிப்பு அடிப்படை பார்த்தால் சென்ற மாதத்தில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு தங்கம் இறக்குமதி (25 டன்)  செய்யப்பட்டுள்ளது. இது 63 சதவீதம் குறைவாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.